Caste Neutral Certificates: ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ்! தமிழ்நாடு அரசுக்கு அரசாணை வெளியிட உயர் நீதிமன்றம் பரிந்துரை!

Madras High Court: சென்னை உயர் நீதிமன்றம், ஜாதி, மதம் இல்லா சான்றிதழ் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. திருப்பத்தூர் வழக்கில், ஜாதி, மதம் இல்லா சான்றிதழ் கேட்ட மனுதாரருக்கு ஆதரவாக நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இதன் மூலம் ஜாதி, மத அடிப்படையிலான பாகுபாட்டைத் தவிர்க்கவும், சமூக நீதியை நிலைநாட்டவும் இந்த நடவடிக்கை உதவும். இது இளைய தலைமுறையினருக்கு உதவியாக இருக்கும்.

Caste Neutral Certificates: ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ்!  தமிழ்நாடு அரசுக்கு அரசாணை வெளியிட உயர் நீதிமன்றம் பரிந்துரை!

சென்னை உயர்நீதிமன்றம்

Published: 

11 Jun 2025 18:03 PM

சென்னை, ஜுன் 11: தமிழ்நாட்டில் ஜாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ்கள் பெறும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு (Tamil Nadu Government) சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) பரிந்துரை செய்துள்ளது. இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் ஜாதி மற்றும் மதம் அடிப்படையில் பிரிவினை இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள். இதன் காரணமாக, இன்றைய இளம் தலைமுறையினர் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதி, மதம் வேண்டாம் என்று முடிவு செய்து, ஜாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ்கள் பெற விரும்புகிறார்கள். இருப்பினும், இந்த சான்றிதழ்கள் பெற சரியான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை என்றும், இதை இப்படி பெறுவது உள்ளிட்ட விவரங்கள் எதுவுமின்றி சிலர் தவிர்க்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு ஜாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ்கள் பெறும் வகையில் உரிய அரசாணையை பிறப்பிக்கும்படி பரிந்துரை செய்துள்ளது.

வழக்கு விவரம்:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருப்பத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் சந்தோஷ் என்ற நபர் தனக்கு ஜாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கி தரும்படி, திருப்புத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்து சந்தோஷ் வெளியிட்டிருந்த மனுவில் தனது குழந்தைகளுக்கு ஜாதி, மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் எந்த சலுகைகளையும் கேட்க போவதில்லை என தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து ஜாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்க தாசில்தார்களுக்கு அதிகாரம் அளித்து எந்த உத்தரவும் இல்லை என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டார்.

மேல்முறையீடு:


தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்து சந்தோஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சந்தோஷ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ், என் செந்தில்குமார் அடங்கிய அமர்வானது, தமிழ்நாட்டில் ஏற்கனவே திருப்பத்தூர், கோயம்புத்தூர், அம்பத்தூர் தாசில்தார்கள் ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கி இருப்பதாக சுட்டிக்காட்டியது. தொடர்ந்து, நீதிபதிகள் மனுதாரருக்கு அது போல் சான்றிதழை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என திருப்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் ஜாதி ரீதியிலான பாரபட்சத்தை தடுக்க வேண்டும் என இன்றைய தலைமுறையினர் போராடி வரும் நிலையில் ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரும் மனுதாரருக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியதுடன், தமிழ்நாடு அரசுக்கு உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என பரிந்துரை செய்தனர்.

இந்தியா முழுவதும் ஜாதி, மத பாகுபாடுகள் நிலவி வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அரசியல் சாசனமானது ஜாதிய ரீதியிலான பாகுபாடுகளை தடை செய்துள்ள போதிலும், சமூக வாழ்க்கை, அரசியல், கல்வி, வேலை வாய்ப்பு, ஜாதி மதம் இன்னுமும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.