இந்த மாவட்டத்தில் வருகிற புதன்கிழமை உள்ளூர் விடுமுறை – காரணம் இதுதான்!
Thanjavur Declares Local Holiday: தஞ்சாவூரில் வருகிற ஜனவரி 7, 2026 அன்று திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் 179-ஆவது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வருகிற ஜனவரி 24, 2025 அன்று பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், ஜனவரி 5: தஞ்சாவூர் (Thanjavur) மாவட்டத்தில் நடைபெற உள்ள திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் 179-ஆவது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு, ஜனவரி 7, 2026 அன்று ஒருநாள் உள்ளூர் விடுமுறை (Holiday) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். கர்நாடக இசையின் தந்தையாக போற்றப்படும் ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் நினைவாக, ஆண்டுதோறும் திருவையாற்றில் நடைபெறும் இந்த ஆராதனை விழாவில், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இசைக் கலைஞர்கள், பக்தர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்வது வழக்கம். குறிப்பாக, பஞ்சரத்ன கிருதிகள் பாடப்படும் நிகழ்ச்சி இந்த விழாவின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.
தஞ்சாவூரில் உள்ளூர் விடுமுறை
இந்த விழாவைக் காணவும், பங்கேற்கவும் தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும் பெருமளவு மக்கள் வரவுள்ளனர் என்பதால் போக்குவரத்து, பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு உள்ளிட்ட ஏற்பாடுகளை கவனிப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் எளிதாக விழாவில் கலந்து கொள்ளவும், நிகழ்ச்சிகள் சீராக நடைபெறவும் வசதியாக, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்குவது நிர்வாக ரீதியாக அவசியம் என மாவட்ட நிர்வாகம் கருதியுள்ளது.




இதையும் படிக்க : இன்று பள்ளிகள் திறப்பு.. தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
தியாகராஜர் ஆராதனை விழா குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பதிவு
— District Collector Thanjavur (@TnjCollector) January 5, 2026
அதன் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு, ஜனவரி 7, 2026 அன்று ஒருநாள் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, இந்த உள்ளூர் விடுமுறை ஈடுகட்ட, வருகிற ஜனவரி 24, 2026 அன்று சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள் வழக்கம்போல செயல்படும்.
இதையும் படிக்க : தமிழகத்தில் தொடரும் மிதமான மழை.. எத்தனை நாட்களுக்கு? எங்கே? முழு விவரம்..
மேலும், அவசர மற்றும் அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அலுவலகங்கள், அரசு வழிகாட்டுதலின்படி வழக்கம்போல் செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரிடையே மகிழ்ச்சியும், கவனமும் பெற்றுள்ளது. உலகப் புகழ்பெற்ற திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழா, தமிழ்நாட்டின் கலாச்சார, ஆன்மிக மற்றும் இசை மரபுகளுடன் நெருக்கமாக இணைந்த முக்கிய நிகழ்வாகும் என்பதால், இந்த உள்ளூர் விடுமுறை அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.