AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்று பள்ளிகள் திறப்பு.. தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

Teachers Protest: ஜனவரி 5, 2025 அன்று அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை என ஆசிரியர்கள் இயக்கம் அறிவித்துள்ளது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து, இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இன்று பள்ளிகள் திறப்பு.. தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 05 Jan 2026 08:05 AM IST

சென்னை, ஜனவரி 5, 2025: சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் சென்னையில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் தேர்தல் வாக்குறுதியான அறிக்கை 311-ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஒரே பாடத்திட்டம், ஒரே பணிச்சுமை, ஒரே பொறுப்புகள் இருந்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தில் வேறுபாடு காட்டப்படுவது சமூக அநீதி என ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த ஊதிய முரண்பாடு காரணமாக ஆசிரியர்களின் வாழ்க்கைத் தரம், குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்:

போராட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல், மனிதச் சங்கிலி, மௌனப் போராட்டம், பதாகை ஏந்திய ஆர்ப்பாட்டம் போன்ற பல்வேறு வடிவங்களில் ஆசிரியர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை காவல்துறை தற்காலிகமாக கைது செய்து, பின்னர் மாலையில் விடுவிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க: 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. யாருக்கு இந்த லேப்டாப் கிடைக்கும்?

இந்தப் போராட்டம் காரணமாக, பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் என பெற்றோர் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நியாயமானவை என்றும், அரசு உரிய தீர்வை விரைவாக வழங்க வேண்டும் என்றும் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆசிரியர்களை கைவிடமாட்டோம் – அமைச்சர் அன்பில் மகேஷ்:

ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், “இடைநிலை ஆசிரியர்களை அரசு கைவிடாது. அவர்கள் அனைவரும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்கள். அதிகாரிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வருடனும் இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மேலும் படிக்க: தமிழகத்தில் தொடரும் மிதமான மழை.. எத்தனை நாட்களுக்கு? எங்கே? முழு விவரம்..

இந்நிலையில், ஜனவரி 5, 2025 அன்று அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை வாபஸ் பெறப்போவதில்லை என ஆசிரியர்கள் இயக்கம் அறிவித்துள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும், போராட்டம் தொடர்வதால் வகுப்புகள் மற்றும் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு உடனடியாக தீர்வு வழங்காவிட்டால், மாநிலம் முழுவதும் போராட்டத்தை விரிவுபடுத்துவது, மாவட்டத் தலைநகரங்களில் தொடர் ஆர்ப்பாட்டங்கள், குடும்பத்துடன் இணைந்து நடைபெறும் போராட்டங்கள் போன்ற கடும் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

Follow Us