Amarnath Ramakrishnan Transfer: கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா பணியிட மாற்றம்.. மத்திய அரசுக்கு முக்கிய தலைவர்கள் கண்டனம்!
Keeladi's Ancient Civilization: கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட கலைப்பொருட்களின் கார்பன் டேட்டிங் கி.மு. 585-க்கு முந்தையது எனக் காட்டுகிறது. இந்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தமிழர்களின் தொன்மையை மறைக்கும் முயற்சி எனக் கண்டிக்கப்பட்டுள்ளது. அவரது அறிக்கையில் எவ்வித மாற்றமும் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அமர்நாத் ராமகிருஷ்ணா
கீழடி, ஜூன் 17: கீழடியில் (Keeladi) இருந்து தோண்டியெடுக்கப்பட்ட கலைப்பொருட்களின் கார்பன் டேட்டிங், பண்டைய தமிழ் நிலப்பரப்பில் நகரப்புற நாகரிகம் இருந்ததை நிரூப்பித்துள்ளது. கார்பன் மாதிரிகள் அடிப்படையில் இவையெல்லாம் கி.மு. 585 அதாவது சுமார் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு என கண்டறியப்பட்டது. இந்தநிலையில், சில வாரங்களுக்கு முன்பு, இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அப்போதைய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் மேற்பார்வை தொல்பொருள் ஆய்வாளராக இருந்த கே.அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் (Amarnath Ramakrishnan), கீழடி மேலும் ஆதாரங்களை கோரி தேவையான திருத்தங்களை செய்து தனது அறிக்கையை மீண்டும் சமர்ப்பிக்குமாறு மத்திய அரசு கேட்டு கொண்டது. இந்தநிலையில், கீழடி அகழாய்வு தொடர்பான தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் நொய்டாவிற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு முழுவதும் கண்டனங்கள் குரல்கள் எழுந்தன.
இந்திய தொல்லியல் துறைக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன் விளக்கம்:
இந்தநிலையில், கீழடி அகழாய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா நொய்டாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன்படி, தேசிய தொல்லியல் மற்றும் நினைவு சின்னங்கள் அமைப்பில் இயக்குநராக அமர்நாத் ராமகிருஷ்ணா தற்போது உள்ளார். இருப்பினும், கடந்த 2025 மே 24ம் தேதி தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன், “ கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை. கால வரிசைப்படியும், அடுக்குகள் வாரியாகவும் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
அகழாய்வு தொடர்பான தட்டுகள், வரைபடங்கள், படங்கள் அனைத்தும் உயர் தெளிவுத்திறனுடன் வழங்கப்பட்டுள்ளன. இறுதி ஆய்வறிக்கை தாக்கல் செய்து ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்கு பின் கேள்வி எழுப்பப்படுகிறது. இருப்பினும், தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து கி.மு. 800-கி.மு.500 என உறுதி செய்தே அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்திருந்தார்.
அமர்நாத் பணியிடமாற்றம்:
அறிக்கை சமர்பித்த 2 வாரங்களுக்கு பிறகு, கீழடி அகழாய்வு தொடர்பான தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை பணியிடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, கீழடி தொடர்பான 982 பக்க அகழாய்வு அறிக்கையினை அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்பித்த நிலையில், அதனை வெளியிட மத்திய அரசு மறுத்து வருவதாகவும், இந்தநிலையில்தான் அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீரென நொய்டாவுக்கு பணியிடமாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
எம்.பி. சு. வெங்கடேசன் கண்டனம்:
தமிழின் தொன்மையையும், கீழடி உண்மையையும் வெளிக்கொண்டு வருவதில் உறுதியாக செயல்பட்ட தொல்லியல் அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் இப்பொழுது மீண்டும் இடமாற்றம்.
கண்டறியப்பட்ட உண்மைக்காக
இடைவிடாமல் வேட்டையாடப்படுகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன்.ஒன்றிய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழக… pic.twitter.com/k0OnaXkmpu
— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 17, 2025
இதுதொடர்பான மதுரை எம்.பி சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், “தமிழின் தொன்மையையும், கீழடி உண்மையையும் வெளிக்கொண்டு வருவதில் உறுதியாக செயல்பட்ட தொல்லியல் அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் இப்பொழுது மீண்டும் இடமாற்றம். கண்டறியப்பட்ட உண்மைக்காக
இடைவிடாமல் வேட்டையாடப்படுகிறார் அமர்நாத் இராமகிருஷ்ணன். மத்திய அரசின் வஞ்சக செயல்களுக்கு தமிழக மக்கள் உரிய முறையில் பதில் அளிப்பார்கள்.” என பதிவிட்டிருந்தார்.