அரக்கோணம் – செங்கல்பட்டு இடையே இரண்டு வழி ரயில் திட்டம்.. ரூ. 993 கோடிக்கு ஒப்புதல் அளித்த இந்திய ரயில்வே..
ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புறநகர் ரயில் சேவை தற்போது அத்தியாவசிய போக்குவரத்து வசதியாக மாறியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி இதனை நம்பியே தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் நன்மை பயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மே 20, 2026: இந்திய ரயில்வே, அரக்கோணம் – செங்கல்பட்டு இடையிலான இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. சுமார் 68 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த திட்டம் ரூ. 993 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வாலாஜாபாத், காஞ்சிபுரம், தக்கோலம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் நேரடி ரயில் இணைப்பின் மூலம் மேலும் வலுப்பெற உள்ளன. குறிப்பாக, சென்னை புறநகர் ரயில் போக்குவரத்து வலையமைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.
முக்கியத்துவம் என்ன?
இந்த இரட்டை பாதை திட்டம், சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு – அரக்கோணம் ஆகிய பகுதிகளை இணைக்கும் சென்னை புறநகர் சுற்று ரயில் வலையமைப்பின் முக்கிய பகுதியாக அமையும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த பாதையில் ஒற்றை ரயில் பாதை மட்டுமே இருப்பதால், ரயில்கள் இயக்கத்தில் தாமதம் மற்றும் நெரிசல் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இரட்டை பாதை அமைக்கப்பட்ட பிறகு, பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களை ஒரே நேரத்தில் சீராக இயக்குவதற்கு வசதி ஏற்படும்.
இதுகுறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “சென்னையின் பரபரப்பான புறநகர் ரயில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் இந்த திட்டம் முக்கிய பங்காற்றும். மேலும் ரயில்களின் நேர்த்தியான இயக்கத்தையும் செயல்திறனையும் மேம்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.
சரக்கு ரயில் இயக்கத்திற்கும் பயன்படும்:
மேலும், இந்த திட்டம் மூலம் சிமெண்டு, கார்கள், உணவுத்தானியங்கள், இரும்பு மற்றும் எஃகு உள்ளிட்ட முக்கிய சரக்குகளின் போக்குவரத்து வேகமாகவும் சீராகவும் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொழிற்துறை மற்றும் வணிக வளர்ச்சிக்கும் இந்த திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. 100 டிகிரியை கடந்து பதிவாகும் வெப்பநிலை.. வானிலை எப்படி இருக்கும்?
இந்த திட்டம் நிறைவேறினால் ரயில்களின் தாமதம் கணிசமாக குறையக்கூடும். கிட்டத்தட்ட இந்த இரட்டை பாதை வழியாக 40-க்கும் மேற்பட்ட ரயில்களை கூடுதலாக இயக்க முடியும் எனவும் நம்பப்படுகிறது. 68 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த திட்டத்திற்கு தெற்கு ரயில்வே கோரிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது பெரும் நெரிசலில் இயங்கி வரும் இந்த பாதையில் கொண்டு வரப்படும் இரட்டை பாதை திட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் ரயில்வே அதிகாரிகள் நம்புகின்றனர். பயணிகள் சேவைக்கு மட்டுமல்லாமல், சரக்கு போக்குவரத்துக்கும் இது பெரும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
ரயில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்:
இந்த பாதையில் ஒற்றை வழித்தடம் மட்டுமே இருப்பதால், பாலூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் போன்ற ரயில் நிலையங்களில் எதிரே வரும் ரயில்களுக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. இரட்டை பாதை அமைந்தால் இந்த பிரச்சினை வெகுவாக குறையும்.
மேலும், அரக்கோணம் முதல் செங்கல்பட்டு வரை சென்னை கடற்கரை வழியாக செல்லாமல், தக்கோலம் வழியாக செல்லும் பிரத்யேக புறநகர் ரயில் சேவையை இயக்குவதற்கும் இந்த இரட்டை பாதை திட்டம் வாய்ப்பை உருவாக்கும் என கூறப்படுகிறது.
ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. புறநகர் ரயில் சேவை தற்போது அத்தியாவசிய போக்குவரத்து வசதியாக மாறியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி இதனை நம்பியே தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் நன்மை பயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.