சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகை.. முதல்வர் ஸ்டாலினுடன் முக்கிய சந்திப்பு.. என்ன மேட்டர்?
Vice President Candidate Sudarshan Reddy Tamil Nadu Visit : குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி, 2025 ஆகஸ்ட் 24ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக தவல் வெளியாகி உள்ளது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளதாக தெரிகிறது.

சுதர்சன் ரெட்டி - முதல்வர் ஸ்டாலின்
சென்னை, ஆகஸ்ட் 22 : குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் (Vice President Election) இந்தியா கூட்டணி (INDIA Alliance) வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். சென்னை வரும் சுதர்சன் ரெட்டி, (Sudarshan Reddy) முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து துணை ஜனாதிபதி தேர்தலுக்கு ஆதரவு திரட்டுகிறார். குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்த ஜக்தீப் தன்கர் 2025 ஜூலை மாதம் ராஜினாமா செய்தார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய இரண்டாவது நாளிலேயே அவர் ராஜினாமா செய்தார். இதனை அடுத்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, குடியரசு துணைத் தலைவர் தேர்தல் 2025 செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 2025 ஆகஸ்ட் 4ஆம் தொடங்கி 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தொடர்ந்து, 2025 ஆகஸ்ட் 25ஆம் தேதி வேட்புமனு தாக்கல் திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும்.
இதற்கிடையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளர் குறித்து பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர். அதில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்ரா ஆளுநரும், தமிழகத்தைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். இவரை போட்டியின்றி தேர்வு செய்ய பாஜக முடிவு எடுத்து, இந்தியா கூட்டணி தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை.
சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகை
இதனை அடுத்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் குறித்து இரண்டு நாட்கள் ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இப்படியான சூழலில், இந்தியா கூட்டணி வேட்பாளர் தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2025 ஆகஸ்ட் 24ஆம் தேதி சென்னைக்கு வருகை தரும் சுதர்ஷன் ரெட்டி, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். இந்தியா கூட்டணி சார்பில் நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களை பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள திமுக உறுப்பினர்கள் தான் அதிகம். எனவே, முதலில் தமிழகத்தில் தனது ஆதரவுகளை சுதர்சன் ரெட்டி திரட்ட உள்ளதாக கூறப்படுகிறது.
Also Read : நாட்டின் 15வது துணை ஜனாதிபதிக்கான தேர்தல்.. எப்போது? வாக்கு எண்ணிக்கை.. தேர்தல் முடிவு.. முழு விவரம்..
மக்களவையில் தற்போது 542 எம்.பிக்கள் உள்ளனர். மாநிலங்களவையில் 239 எம்.பிக்கள் உள்ளனர். மொத்தம் 781 எம்.பிக்கள் உள்ளனர். துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற 391 எம்.பிக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையாக என்டிஏ கூட்டணி உள்ளதால், சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.