ரெய்டு என அவதூறு பரப்பிய செல்வப்பெருந்தகை.. எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என ஐ.டி அதிகாரிகள் கோரிக்கை..
IT Raid On Selvaperunthagai House: தற்போது வெளியான தகவலின் படி, அப்படி எந்த வருமான வரித்துறை சோதனையும் நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, செல்வப் பெருந்தகை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும் வருமானவரித்துறை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 21, 2026: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து செல்வப் பெருந்தகை கூறுகையில், “ஜனநாயக செயல்பாடுகளைத் தடுக்கவும், எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்கவும் மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கை இது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வந்துள்ள நிலையில், அவரது கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுக்கும் முயற்சியாகவும் இது உள்ளது” என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
வருமானவரித்துறை ரெய்டு என அவதூறு பரப்பிய செல்வப்பெருந்தகை:
ஆனால் தற்போது வெளியான தகவலின் படி, அப்படி எந்த வருமான வரித்துறை சோதனையும் நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, செல்வப் பெருந்தகை மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான திரு. கே. செல்வப்பெருந்தகை, சமூக ஊடகத் தளம் “X”-இல் 20.04.2026 அன்று வெளியிட்ட பதிவில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாகக் கூறி, தன்னை சட்டவிரோதமாகத் தடுத்து வைத்ததாகவும், தனது அரசியல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்பதைத் தடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதே குற்றச்சாட்டுகளை அவர் அன்றைய தினமே ஊடகங்களுடனான உரையாடல்களிலும் மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், சென்னையின் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்ததாக சில ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.
மேற்கண்ட குற்றச்சாட்டுகள் மற்றும் செய்திகளைத் தொடர்ந்து, வருமான வரித்துறை உடனடியாக ஆய்வு செய்து உண்மைத்தன்மையைச் சரிபார்த்தது. அதில், அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றதும், உண்மையற்றதும் என்பதும் தெரியவந்துள்ளது.
பொய்யான செய்தி:
20.04.2026 அன்று அல்லது அதற்கு முன், திரு. கே. செல்வப்பெருந்தகைக்கு எதிராக வருமான வரித்துறையினரால் எந்தவிதமான சோதனை, ஆய்வு அல்லது அமலாக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், அவரது நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஊடகங்களில் கூறப்பட்டதைப் போல, சென்னையின் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் உட்பட எந்த இடத்திலும் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறையிடம் புகார்:
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சில வழக்கமான சரிபார்ப்பு நடவடிக்கைகள், கணக்கில் வராத பணம் தொடர்பான உளவுத்தகவல்களின் அடிப்படையில் நடைபெற்றவையாகும். அவை செல்வப் பெருந்தகையுடன் எந்த தொடர்பும் இல்லாதவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சரிபார்ப்புகளில் மேல்நடவடிக்கை எடுக்க வேண்டிய எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செல்வப் பெருந்தகை வெளியிட்ட தவறான மற்றும் திசைதிருப்பும் தகவல்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தவறான தகவல் பரப்பல் மற்றும் அவதூறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.