வீடு புகுந்து கத்தி முனையில் நகை பறிப்பு.. கை விரலை கடித்து கொள்ளையனை விரட்டிய ‘சிங்கப்பெண்’!!
அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளார். கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் மதிப்பிலான தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளார். இதனால், பதறிப்போன சிவகமலா, சங்கிலியைப் பறித்ததோடு நில்லாமல் தன்னைத் தாக்க முயன்ற கொள்ளையனிடமிருந்து தப்பிக்க, ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார்.

மாதிரிப் புகைப்படம் (AI)
தூத்துக்குடி, மார்ச் 08: வீடு புகுந்து கத்தி முனையில் தங்க சங்கிலி பறித்த கொள்ளையனின் கை விரலை பெண் கடித்ததால், கொள்ளையன் சிக்கிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆபத்தான நேரங்களில் பதற்றமடையாமல் துணிச்சலுடன் செயல்பட்டால் எத்தகைய சூழலையும் வெல்ல முடியும் என்பதற்குத் தூத்துக்குடியில் நடந்த இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக மாறியுள்ளது. கத்தி முனையில் இருந்தபோதும் சற்றும் அஞ்சாமல், தனது சமயோசித புத்தியால் கொள்ளையனைச் சிக்க வைத்த ஒரு பெண்ணின் வீரம் இப்போது அப்பகுதி மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
இதையும் படிக்க: சிசிடிவியில் சிக்குவார்களா கொள்ளையர்கள்? வியாபாரிடம் 3 கிலோ தங்கம் வழிபறி
வீடு புகுந்த மர்ம நபர்:
தூத்துக்குடி கதிர்வேல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகமலா (45). இவர் கடந்த மார்ச் 6ம் தேதி (நேற்று முன்தினம்) மாலையில் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்தத் தனிமையைப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், திடீரென வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்துள்ளார். எதிர்பாராத இந்த அத்துமீறலைக் கண்டு சிவகமலா அதிர்ச்சியடைந்து கூச்சலிட முயன்றார். சிவகமலா சத்தம் போடுவதற்குள், அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் வைத்து மிரட்டியுள்ளார்.
7 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு:
பின்னர், அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் மதிப்பிலான தங்கச் சங்கிலியைப் பறித்துள்ளார். இதனால், பதறிப்போன சிவகமலா, சங்கிலியைப் பறித்ததோடு நில்லாமல் தன்னைத் தாக்க முயன்ற கொள்ளையனிடமிருந்து தப்பிக்க, ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார். அதன்படி, கொள்ளையில் ஈடுபட்ட அந்த நபரின் கை விரலைச் சற்றும் எதிர்பாராத விதமாகப் பலமாகக் கடித்தார். கடியின் வலி தாங்க முடியாமல் அலறிய அந்த மர்ம நபர், நகையுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
காட்டிக்கொடுத்த கை விரல் காயம்:
இது குறித்துத் தூத்துக்குடி சிப்காட் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணையில் இறங்கினர். இதையொட்டி, போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு நபர் கை விரலில் காயத்துடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தியதில், அவர்தான் சிவகமலாவின் வீட்டில் கொள்ளையடித்தவர் என்பது உறுதி செய்யப்பட்டது.
விசாரணையில் திடுக் தகவல்:
தொடர்ந்து, அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தைச் சேர்ந்த சசிக்குமார் (30) என்பது தெரியவந்தது. அவர், கடந்த 4 ஆண்டுகளாகத் தூத்துக்குடி டி.எம்.பி காலனியில் உள்ள தனது மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். கட்டிட வேலைக்குச் சென்ற அவருக்கு அன்று வேலை கிடைக்கவில்லை. பணத் தேவைக்காகக் கதிர்வேல் நகர் பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டுத் திருடத் திட்டமிட்டுள்ளார். அப்போது, அந்த பகுதியில் உள்ள சிவகமலா வீட்டுக்குள் புகுந்து நகையை பறித்து சென்று இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க: திருடப்போன இடத்தில் அசந்து தூங்கிய கொள்ளையன்.. ‘லேடீஸ் ஜீன்ஸ்’ அணிந்து தப்பியோடிய விநோதம்..
போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கை:
தொடர்ந்து, சிவகமலாவின் துணிச்சலான செயலால் அடையாளம் காணப்பட்ட சசிக்குமாரைச் சிப்காட் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து திருடப்பட்ட 7 பவுன் தங்கச் சங்கிலியும் பத்திரமாக மீட்கப்பட்டது. திருடனிடம் நகையைப் பறி கொடுத்தாலும், மன உறுதியுடன் போராடி அவனைச் சட்டத்தின் முன் நிறுத்திய சிவகமலாவின் துணிச்சலை காவல்துறையினரும் பொதுமக்களும் வியந்து பாராட்டுகின்றனர்.