புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு செல்ல இலவச பேருந்து வசதி…புதுச்சேரியில் அசத்தல் அறிவிப்பு!
Free Bus Service For New Year Celebrations: புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அரசு சார்பில் இலவச பேருந்து சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குஷியாகி உள்ளனர். புதுச்சேரி விழாக் கோலம் பூண்டுள்ளது.

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாடத்துக்கு செல்ல இலவச பேருந்து சேவை
புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்ட தொடங்கி உள்ளது. இந்த மாநிலத்தில் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிக அளவு படையெடுத்துள்ளனர். இவர்கள், புதுச்சேரியின் வெள்ளை மாளிகை ( ஒயிட் டவுன்) பகுதியில் ஜோடி ஜோடியாக சுற்றி வருகின்றனர். இந்த மாநிலத்தில் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என இவர்களை கட்டி போட்டிருப்பது, இந்த பகுதியில் பிரஞ்சு கலாச்சாரத்தின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள், மின் விளக்குகள், கட்டிடங்களுக்கான வர்ண பூச்சுகள் தான் முதல் காரணமாக இருக்கும். இதற்கு அடுத்த படியாக ராக் பீச், பாண்டி மெரினா, பப், ரெஸ்டோ பார், கேசினோ ஆகியவை தான்.
புதுச்சேரியில் நிரம்பி வழியும் விடுதி அறைகள்
டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே புதுச்சேரி மாநிலத்தில் உள்ள விடுதிகளில் அறைகளை முன் பதிவு செய்யும் பணிகளில் வெளி மாநில சுற்றுலாப் பயணிகள் இறங்கி விடுவர். தற்போது, புதுச்சேரியில் உள்ள அனைத்து விடுதிகளும் நிரம்பி வழிகிறது. அவர்கள் தங்களது இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சாலைகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இதனால், புதுச்சேரி மாநிலம் விழாக் கோலம் பூண்டுள்ளது.
மேலும் படிக்க: புத்தாண்டு…மதுக்கடையில் குவிந்துள்ள மதுபானங்கள்…மது பிரியர்களே என்ஜாய்!
கடற்கரைப் பகுதிகளில் முன்னேற்பாடுகள்
இதனால், புதுச்சேரி நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இன்று புதன்கிழமை ( டிசம்பர் 31) இரவு ராக் பீச் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடப்படுவதால் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக கடற்கரை சாலை மற்றும் நகரத்தின் மையப் பகுதியில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் குவிந்திருப்பர்.
ஒயிட் டவுன் பகுதியில் போக்குவரத்துக்கு தடை
இதனால், இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணி முதல் மறு நாள் (வியாழக்கிழமை) காலை 9 மணி வரை ஒயிட் டவுன் (வெள்ளை மாளிகை) பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக 10 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச பேருந்து சேவை
மேலும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக புதுச்சேரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ராக் பீச் கடற்கரைக்கு செல்ல 30 தற்காலிக இலவச பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வழிப்பாதைகளை எளிதாக அடையாளம் காண்பதற்கு 400 போக்குவரத்து வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: உலகில் முதலில் புத்தாண்டு கொண்டாடும் நாடும் எது? இந்தியாவுக்கு எந்த இடம்?