சென்னை, மார்ச் 4, 2026: திருச்சியில் மண்டல ரயில்வே அலுவலக நுழைவாயிலில் தமிழ் பெயருக்கு பதிலாக ‘கர்த்தவ்ய துவார்’ என ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஹிந்தி திணிப்பு வெறியில் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. பாஜக ‘மொழி ஒன்று, வரிவடிவம் மூன்று’ எனும் வகையில் ஹிந்தி பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான ஹிந்தி திணிப்பு செயலில் இறங்கியுள்ளது மத்திய பாஜக அரசு” என தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
எப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டு வாங்கி, செய்யும் ஊழல் எல்லாம் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த… https://t.co/nox2GDuf0p
— K.Annamalai (@annamalai_k) March 4, 2026
இதற்கு பதிலளிக்கும் வகையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக்காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?” என கடுமையாகத் தாக்கியுள்ளார்.
மேலும் படிக்க: எடப்பாடி தொகுதியில் 5 முறை வெற்றியை பதிவு செய்த கே.பழனிசாமி!
இது தொடர்பாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில், “எப்போதெல்லாம் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டுவாங்கி, செய்யும் ஊழல்கள் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம் அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?
இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் புழக்கம் என உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்?” என குறிப்பிட்டுள்ளார்.
இந்தித் திணிப்பை கொண்டு வந்த காங்கிரஸ் – தமிழிசை சௌந்தராஜன்:
அதேபோல், இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார். சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சௌந்தர்ராஜன், “மத்திய அரசு எல்லா மொழிகளுக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்து கொண்டே இருக்கிறது. இந்தி திணித்த காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது.
மேலும் படிக்க: மக்களே உஷார் … தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக உயரும்
தனியார் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கிடையாது என முதலில் அமைச்சர் அறிவிப்பாரா? திமுக அரசு தனது தோல்வியை மறைப்பதற்காக மொழிப் பிரச்சினையை எழுப்புகிறது. திமுகவினர் ஹிந்தியில் போஸ்டர் அச்சடித்தனர்; ஹிந்தியில் ஓட்டு கேட்டார்கள். முதலமைச்சர் பதட்டத்தில் இருக்கிறார்; அவர் மட்டுமல்ல, கூட்டணி கட்சியினரும் பதட்டத்தில் இருக்கிறார்கள்” என குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
