“இளைஞர்களே இலக்கு”.. சென்னையில் இருந்து கஞ்சா கடத்திய கல்லூரி மாணவி.. பிடிபட்டது எப்படி?
சென்னைக்குச் சென்று அங்கிருந்து இந்த விலை உயர்ந்த போதைப்பொருளை வாங்கி வந்ததாகச் சுஹைனா போலீஸாரிடம் ஒப்புக்கொண்டார். மங்களூரு நகரில் உள்ள வசதி படைத்த பெரும் புள்ளிகள் மற்றும் கல்லூரி இளைஞர்களைக் குறிவைத்து, அவர்களுக்கு அதிக விலைக்கு விற்று பெருமளவு லாபம் ஈட்ட அவர் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.

கைதான கல்லூரி பெண்
கர்நாடக மாநிலம் மங்களூருவில், சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்தர ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாகத் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரைக் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டத்திற்கு உட்பட்ட மங்களூரு நகரத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதைத் தடுக்க போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், மங்களூரு முதலாவது ரயில் நிலைய சாலைப் பகுதியில் பெரும் அளவில் போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாகத் தனிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
மேலும் படிக்க: அரசியல் ரீதியாக பதிவிடும் எக்ஸ் கணக்குகள் முடக்கம் – தமிழக அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை
போலீசார் தீவிர கண்காணிப்பு:
இதனைத் தொடர்ந்து, கடந்த நேற்று முன்தினம் முதல் குறிப்பிட்ட அந்த பகுதியில் போலீஸார் மாறுவேடத்தில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். கண்காணிப்பின் போது, ரயில் நிலைய சாலைப் பகுதியில் ஒரு இளம்பெண் நீண்ட நேரமாகச் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த போலீஸார், அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அந்த பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது.
சிக்கிய கல்லூரி மாணவி:
உடனடியாக அவரது உடைமைகளைச் சோதனை செய்தபோது, அதில் ஒரு கிலோ 42 கிராம் எடை கொண்ட ‘ஹைட்ரோபோனிக் கஞ்சா’ இருப்பது கண்டறியப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 35 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரிடமிருந்த கஞ்சா மற்றும் செல்போனை பறிமுதல் செய்த போலீஸார், அந்த பெண்ணைக் கைது செய்தனர்.
யார் இந்த சுஹைனா?
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்திய மேல் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர் தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பாணா பகுதியைச் சேர்ந்த சுஹைனா (21) என்பது தெரியவந்தது. இவர் சித்தப்புராவில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ (BCA) மூன்றாம் ஆண்டு (இறுதியாண்டு) படித்து வரும் மாணவி என்பதும் உறுதி செய்யப்பட்டது.
திட்டமிட்ட கடத்தல் பின்னணி:
சென்னைக்குச் சென்று அங்கிருந்து இந்த விலை உயர்ந்த போதைப்பொருளை வாங்கி வந்ததாகச் சுஹைனா போலீஸாரிடம் ஒப்புக்கொண்டார். மங்களூரு நகரில் உள்ள வசதி படைத்த பெரும் புள்ளிகள் மற்றும் கல்லூரி இளைஞர்களைக் குறிவைத்து, அவர்களுக்கு அதிக விலைக்கு விற்று பெருமளவு லாபம் ஈட்ட அவர் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
பழைய குற்றப் பின்னணி:
இது சுஹைனாவின் முதல் கடத்தல் முயற்சி அல்ல என்பதும் போலீஸார் நடத்திய சோதனையில் அம்பலமானது. அவர் ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர். கரூர் காவல் நிலையத்தில் இவர் மீது ஏற்கனவே ஒரு போதைப்பொருள் வழக்கு நிலுவையில் உள்ளது. பெங்களூரு சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையினரால் மற்றொரு கடத்தல் வழக்கும் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “மதுக்கடையை மூடினால் சந்து கடைகள் திறப்பு”.. விளாசிய செளமியா அன்புமணி.. நோட்ஸ் எடுத்த முதல்வர் விஜய்!!
தீவிரமடையும் விசாரணை:
தற்போது மங்களூரு போலீஸார் போதைப்பொருள் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த கடத்தல் பின்னணியில் சென்னையில் உள்ள முக்கிய போதைப்பொருள் கும்பல் தலைவர்கள் யார்? மங்களூருவில் சுஹைனாவுக்கு உடந்தையாக இருந்தவர்கள் மற்றும் அவரிடமிருந்து போதைப்பொருள் வாங்கக் காத்திருந்தவர்கள் யார்? என்பது குறித்துப் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் மங்களூரு மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.