வாழைப்பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன்.. உணவு குழாயில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சோகம்!!
வாழைப்பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இந்த மரணத்திற்கு மருத்துவர்கள் பல்வேறு காரணங்களை கூறி வருகின்றனர். எது எப்படியோ, 5 வயது சிறுவனின் மரணம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகிவிட்டது.

உயிரிழந்த சிறுவன், கதறி அழுது துடித்த பெற்றோர்
ஈரோடு, டிசம்பர் 04: ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, சிறுவனின் உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுவனின் உயிரிழப்புக்கான காரணத்தை அறிய மருத்துவர்கள் உட்பட தமிழகத்தில் பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர். ஏனெனில், 5 வயது சிறுவன் வாழைப்பழம் சாப்பிட்டதால் உயிரிழந்தது என்பது குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் எவருக்கும் திடுக்கிடும் தகவலாக தான் இருக்கும். அதோடு, மருத்துவர்களும் அதற்கான சரியான காரணம் தெரிய வருவதன் மூலம் மக்களுக்கு இனி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பில் பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க : மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்.. கோவையில் பயங்கரம்!!
வாழைப்பழம் விழுங்க முடியாமல் தவித்த சிறுவன்:
ஈரோடு மாவட்டம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த மாணிக்கம்-மகாலட்சுமி தம்பதி. இவர்களுக்கு 5 வயதில் சாய்சரண் என்ற மகனும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இதனிடையே, தம்பதியினர் இருவரும் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வருவதால், குழந்தைகள் இருவரையும் அவர்களது பாட்டி வீட்டில் விட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை (டிச.2) இரவு சிறுவன் சாய்சரணுக்கு அவரது பாட்டி வாழைப்பழத்தை சாப்பிட கொடுத்துள்ளார். பழத்தை சாப்பிட்ட சிறுவன் அதனை விழுங்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில், வாழைப்பழம் சிறுவனின் மூச்சுக்குழாயில் சிக்கியது.
மூச்சுத் திணறலால் சிறுவன் உயிரிழப்பு:
இதனால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக சிறுவன் சாய்சரணை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, சிறுவனின் உடல் ஈரோடு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, மகனின் சடலத்தை கண்டு பெற்றோர் கதறி அழும் காட்சி காண்போரை நிலைகுலைய வைத்தது. அதோடு, இந்த உயிரிழப்பு அவரது பெற்றோர் மட்டுமில்லாமல், யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத மரணமாகி, அப்பகுதியையே சோகத்தில் மூழ்க செய்தது.
இதையும் படிக்க: மின்சாரம் தாக்கி டீக்கடை உரிமையாளர், ஊழியர் பலி – மதுரை அருகே சோகம்
மருத்துவர்கள் கூறுவது என்ன?
மூச்சுத்திணறல் ஏற்பட்ட சமயத்தில் துரிதமாக செயல்பட்டிருந்தால் சிறுவனை காப்பாற்றி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு எந்த உணவுகளை கொடுத்தாலும் அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டியோ, உருட்டோய கொடுக்க வேண்டும் எனவும், மூச்சுத்திணறல் ஏற்படும் சமயத்தில் நெஞ்சில் கை வைத்தபடி தலையை நன்கு தாழ்த்தி பிடித்துக் கொண்டு முதுகில் வேகமாக தட்டினால் உணவுக்குழாயில் சிக்கிய பொருள் வெளியே வர வாய்ப்பு உள்ளது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.