2026 தேர்தல்.. அதிமுகவின் முதல் வாக்குறுதி.. இபிஎஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Edappadi Palanisamy : தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இன்னும் தேர்தலுக்கு 11 மாதங்களே உள்ள நிலையில், தனது முதல் தேர்தல் வாக்குறுதியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதோடு, அண்ணா குறித்து விமர்சித்த முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
சென்னை, ஜூன் 26 : அதிமுக பொதுச் செயலளார் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palanisamy) 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான (Tamil Nadu Assembly Election) தனது முதல் வாக்குறுதியை அளித்துள்ளார். அதோடு, அண்ணாவை எப்போது விட்டுக் கொடுக்க மாட்டோம் எனவும் பதிலடி கொடுத்துள்ளார். அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்து விட்டதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்து இருந்த நிலையில், அதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் கொடுத்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் முதல்வர் ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்து இருந்தார். அவர் பேசுகையில், ”இந்த மண், தந்தை பெரியார் பயன்படுத்திய மண். பேரறிஞர் அண்ணாவால் மேன்மைப்படுத்தப்பட்ட மண். இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள். அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம். அண்ணா பெயரையே, அவர்கள் அடமானம் வைத்து விட்டார்கள். இன்றைக்கு கட்சியை அடமானம் வைத்திருப்பவர்கள், நாளைக்கு தமிழ்நாட்டை அடமானம் வைக்க நாம் அனுமதிக்கக் கூடாது.
‘அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டோம்’
தமிழ்நாடும் தன்மானம் உள்ள தமிழ்நாட்டு மக்களும் இந்த மண்ணுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளின் நோக்கத்தை புரிந்து அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த நிலையில், அதற்கு தற்போது எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ” அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், திமுக-வுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா? ஒருநாள், ஒரு நொடி கூட, எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுக தான்” என குறிப்பிட்டு இருக்கிறார்.
அதிமுக தேர்தல் வாக்குறுதி
நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதலமைச்சர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார்,
அஇஅதிமுக-வைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார்.அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள பொம்மை முதலமைச்சர், “அண்ணா பெயரை @AIADMKOfficial…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) June 26, 2025
மேலும், 2026 தேர்தல் முதல் வாக்குறுதியை எடப்பாடி பழனிசாமி அளித்துள்ளார். அதாவது, திமுக-வால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன் எனவும்
இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.