Tamil Nadu CM MK Stalin: எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது.. மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

DMK General Council Meet: மதுரையை அடுத்த உத்தங்குடியில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெறுவோம் என உறுதியளித்தார். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க வேண்டியதன் அவசியத்தையும், அதிமுக-பாஜக கூட்டணியின் மீதான கடும் விமர்சனத்தையும் அவர் முன்வைத்தார். தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான திமுக தொண்டர்கள் கூடியிருந்தனர்.

Tamil Nadu CM MK Stalin: எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது.. மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் - எடப்படி பழனிசாமியுடன் அமித்ஷா

Updated On: 

01 Jun 2025 16:02 PM

மதுரை, ஜூன் 1: மதுரையை அடுத்த உத்தங்குடியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் (Dravida Munnetra Kazhagam) பொதுக்குழு கூட்டம் இன்று அதாவது 2025 ஜூன் 1ம் தேதி நடைபெற்று வருகிறது. திமுக பொதுக்குழு கூட்டம் சுமார் 48 ஆண்டுகளுக்கு பிறகு, மதுரையில் நடைபெறவுள்ளதால் தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்தனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin), அமைச்சர்கள், எம்.பிக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக, பொதுக்குழு தொடங்குவதற்கு முன்பு, 100 அடி உயரத்தில் திமுக கொடியை மு.க.ஸ்டாலின் ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அதிமுக – பாஜக கூட்டணி (BJP AIADMK Alliance), திமுக கூட்டணி, திராவிட மாடல் ஆட்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தொண்டர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு:

மதுரை உத்தங்குடியில் நடைபெற்று வரும் திமுக பொதுக்குழுவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான அலையை விட, ஆதரவான அலையே அதிகளவில் உள்ளது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை என்ற ஆணவ குரலில் பேசுபவன் நான் அல்ல. எந்த காலத்திலும் எனக்கு மமதையோ, ஆணவமோ இருந்தது இல்லை. பணிவுதான் தலைமை பண்பின் அடையாளம் என்று நினைப்பவன் நான். வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்வோம் என்று சொல்வது, உங்கள் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையில்தான்.

மதுரை திமுக பொதுக்குழு:

அடுத்தாண்டு இதே நேரம், திமுக 7வது முறையாக ஆட்சி அமைத்தது என்பதுதான் தலைப்பு செய்திகளாக இருக்க வேண்டும். அதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும். நான் திமுக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான காரணங்களில் ஒன்று. நம்முடைய வலுவான கூட்டணிதான். அவர்களோடு நான் எப்படி நட்போடும், பாச உணர்வுடனும் இருக்கிறேனோ, நீங்களும் அதே உணர்வோடு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

திமுகவில் முடிந்த அளவிற்கு இளைஞர்களுக்கு வாய்ப்பைக் கொடுங்கள். எந்தளவிற்கு இளைஞர்களுக்கு இடம் கொடுக்கிறீர்களோ, அந்தளவுக்கு கழகத்தில் புது ரத்தம் பாயும், செயல்பாடுகள் வேகமாக இருக்கும். நமது எதிர்கால வெற்றியும் உறுதி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

பாஜக – அதிமுக கூட்டணி குறித்து விமர்சனம்:

தொடர்ந்து, அதிமுக – பாஜக கூட்டணி குறித்து விமர்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ அதிமுக – பாஜக கூட்டணியை அமித்ஷா அறிவித்தபோது ஒரு வார்த்தைக்குட பதிலளிக்காமல் அமைதியாக பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி உட்கார்ந்திருந்தார். என்ன ஒரு அடக்கம். சசிகலா எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அறிவித்தபோது, எப்படியெல்லாம் ஆக்‌ஷன் செய்தாரோ அதே மாதிரியான நடிப்புதான் இது. என்ன ஒன்று! காலில் மட்டும் விழவில்லை. அதையும் தனியாக செய்தார்களோ என்பது நமக்கு தெரியவில்லை. தற்போது ஒட்டுமொத்தமாக பாஜகவின் கண்ட்ரோடுக்கு அதிமுக சென்றிருக்கிறது. அடுத்து, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பாஜகவின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்லத்தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி துடிக்கிறார். அதன்படி, எந்த ஷா வந்தாலும், தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்பவுமே அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்.” என்று பேசினார்.