கூட்டணியில் குழப்பம்.. காங்கிரஸ் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு மேலிடத்தில் இருந்து வந்த போன் கால்..
DMK alliance: தற்போது, 2026 தேர்தலில் காங்கிரஸ் தரப்பில் 35 தொகுதிகள் கேட்கப்பட்டு அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதேபோல், ஆட்சியில் அதிகாரம் கேட்டபோதும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், இத்தேர்தலில் காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் தர திமுக முன்வந்துள்ளது. அதன்படி, 25+1 என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது.

கோப்புப் புகைப்படம்
சென்னை, மார்ச் 03: திமுகவிடம் தொகுதி பங்கீடு விவகாரத்தில் குழப்பம் நீடிப்பதாக கூறப்படும் நிலையில், தமிழக காங்கிரஸ் எம்.பி., எம்எல்ஏக்கள் மனநிலை என்ன? என்பது குறித்து தேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தொலைபேசி மூலம் கேட்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே, காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள வந்த வண்ணம் உள்ளன. இதனை அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தொடக்கம் முதலே திட்டவட்டமாக மறுத்து வருகிறார். எனினும், மேலிட தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: அதிமுக – பாஜக கூட்டணியில் யாருக்கு யார் தலைமை என்றே தெரியாமல் உள்ளனர் – முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சனம்..
2004ல் இருந்து தொடரும் கூட்டணி:
கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது சோனியா காந்தி உருவாக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸுடன் திமுக கை கோர்த்தது. அன்று முதல் இன்று வரை 22 ஆண்டுகளாக (2014 நாடாளுமன்ற தேர்தல் தவிர்த்து) இந்த கூட்டணி நீடித்து வருகிறது. தொடக்கத்தில் காங்கிரஸூக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பின்னர் அது மெல்ல மெல்ல குறைந்து வந்துள்ளது. அதன்படி, 2011 சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. 2016 சட்டமன்ற தேர்தலின் போது இந்த எண்ணிக்கை சற்று குறைந்து 41 ஆனது. 2021-ம் சட்டமன்ற தேர்தலில், 25 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது.
கூடுதல் தொகுதிகள் கேட்டு பிடிவாதம்:
தற்போது, 2026 தேர்தலில் காங்கிரஸ் தரப்பில் 35 தொகுதிகள் கேட்கப்பட்டு அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதேபோல், ஆட்சியில் அதிகாரம் கேட்டபோதும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. எனினும், இத்தேர்தலில் காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் தர திமுக முன்வந்துள்ளது. அதன்படி, 25+1 என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் தரப்பில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகள் கேட்டு அழுத்தம் தருவதாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த கிரிஷ் சோடாங்கர் டெல்லியில் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், ‘திமுக கூட்டணியில் 25 இடங்களை ஏற்றுக் கொள்ள மாட்டோம்’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் காங்கிரசின் பலத்தை தவெக அங்கீகரிக்கிறது என்ற அதிரடி கருத்தையும் கூறினார்.
காங்கிரஸ் மேலிடம் தீவிர ஆலோசனை:
இதனிடையே, ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை மறுதினம் முடிவடைய இருக்கிறது. திமுக ஒதுக்கும் 25 தொகுதிகளை பெற்றுக்கொண்டு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டை உறுதி செய்தால்தான் இந்த பதவியிடம் கிடைக்கும் என்பதால் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் டெல்லியில் அவசர ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடாங்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். இதில் திமுக தொகுதி பங்கீடு விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி, எம்எல்ஏக்கள் மனநிலை என்ன? என்பதை கேட்டறிந்து தன்னிடம் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு கே.சி.வேணுகோபாலை ராகுல் காந்தி கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
இரவில் வந்த போன் கால்:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்எல்ஏக்களும், 9 எம்.பிக்களும் இருக்கிறார்கள். இதைத்தொடர்ந்து, நேற்றிரவு அவர்கள் அனைவரையும் கே.சி.வேணுகோபால் போனில் தொடர்பு கொண்டு கருத்து கணிப்பு நடத்துவது போல் அவர்களது கருத்துகளை கேட்டறிந்துள்ளார். அப்போது, பெரும்பாலானோர் திமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.