வால்பாறைக்கு சுற்றுலா செல்லலாமா… தற்போதைய காலநிலை எப்படி உள்ளது!
Valparai Tourist Spot: கோவை மாவட்டத்தில் உள்1ள வால்பாறைக்கு சுற்றுலா செல்லலாமா. அந்தப் பகுதியில் தற்போதைய கால நிலை குளிர்ச்சியாக இருக்கிறதா அல்லது வெயில் வாட்டி வதைக்கிறதா என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம். இதன் மூலம் சுற்றுலா திட்டமிடலாம்.

வால்பாறையில் கால நிலை எப்படி உள்ளது
தமிழகத்தில் பல்வேறு முக்கியமான சுற்றுலா தளங்கள் உள்ளன. அதில், ஒன்றுதான் கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை ஆகும். இந்த பகுதியில் பரந்து விரிந்து காணப்படும் தேயிலை தோட்டங்கள் மற்றும் இங்கு நிலவி வரும் சீதோஷ்ண சூழல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இதனால், இந்த பகுதியில் எந்த நேரத்திலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இருந்தவாறு இருக்கும். இதிலும் குறிப்பாக, வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வால்பாறையில் குவிந்திருப்பர். இவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அந்த பகுதியில் சலசலவென ஓடி செல்லும் கூழாங்கல் ஆறு மற்றும் பச்சை வண்ண போர்வையை போர்த்தியவாறு இருக்கும் தேயிலை தோட்டத்தை சுற்றிப் பார்த்துச் செல்வர்.
வால்பாறையில் தற்போதைய காலநிலை
இந்த நிலையில், கடந்த மாதங்களில் வால்பாறை பகுதியில் இதமான சூழல் நிலவி வந்தது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு படையெடுத்தனர். இதனால், அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகமாக இருந்ததால் ரம்மியமாக காணப்பட்டது. இந்த நிலையில், ஒரு மாத காலமாக வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக, கூலாங்கல் ஆறு, இறைச்சி பாறை அருவி, வெள்ள மழை ஆறு, சின்னக்கல்லாறு ஆகிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் அணைகளில் நீர் வரத்து சரசரவென குறைந்து வருகிறது.
மேலும் படிக்க: சேலத்தில் என்ன நடந்தது? பந்தல் போடலையா? வேலூர் பொதுக்கூட்டம் – தவெகவினரிடம் எஸ்பி கேள்வி
இரவில் குளிர்-பகலில் வெயில்
இதனிடையே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் அதிக அளவு குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இதே போல, வால்பாறை பகுதியிலும் இரவு நேரங்களில் குளிர் அதிகரித்து காணப்படுகிறது. இருந்தாலும், பகல் நேரத்தில் சூரியனின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக பகல் நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். இதனால், வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதில், குறிப்பாக வார இறுதி நாட்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்த அளவே இருந்தனர்.
சுற்றுலா பயணிகள் மத்தியில் சோகம்
தமிழகத்தில் சிபிஎஸ்சி 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதே போல அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான தேர்வுகள் விரைவில் தொடங்கி நடைபெற உள்ளன. இந்த தேர்வுகள் முடிவடையும் நிலையில், கோடை விடுமுறையில் ஏராளமான பொதுமக்கள் சுற்றுலா செல்வதற்கு திட்டமிடுவார்கள். இந்த நிலையில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவு வரும் நேரத்திலும், கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவும் வால்பாறை பகுதியில் நீர்வரத்து குறைந்து வருவது சுற்றுலா பயணிகள் மத்தியில் ஒருவித சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: சென்னையின் மர்ம பங்களா – அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு என்ன நடந்தது?