பகுதி நேர ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்…சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
CM MK Stalin: பகுதி நேர ஆசிரியர்களுக்கு அவர் பணி நிரந்தரம் செய்யப்படும் போது, அவர்களது பணிக் காலத்தின் அடிப்படையில் சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படுவதாக சட்டமன்ற கூட்டத் தொடரில் முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான ஆணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு முதல்வர் முக்கிய அறிவிப்பு
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் தற்போது 15- ஆவது நாளாக நீடித்து வருகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான ஆசிரியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும், போலீசாருடன் பகுதிநேர ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், தள்ளு முள்ளுவில் ஈடுபடுவதாக பல்வேறு நிகழ்வுகள் நடந்து வந்தன. இந்த நிலையில், தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்காக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்பும்போது, பகுதி நேர ஆசிரியர்களை, நிரந்தர ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்கு அவர்களது பனிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.
சிறப்பு மதிப்பெண்களுக்கான ஆணை வெளியிடப்படும்
அதன் அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்கள் நிரந்தர ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்படுவார்கள். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பானது பகுதி நேர ஆசிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக பகுதி நேர ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் முரளி கூறுகையில், தமிழக சட்டப் பேரவையில் 110 விதிகளின் கீழ் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என்று நினைத்தோம்.
மேலும் படிக்க: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா? இன்றும் நாளையும் நடக்கும் சிறப்பு முகாம்..
முதல்வரின் அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது
ஆனால் தேர்தல் வாக்குறுதி போலவே, முதல்வர் தற்போதைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது எங்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. எனவே, பணி நிரந்தர அறிவிப்பாணை வெளியிடும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார். கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, பகுதி நேர ஆசிரியர்களிடம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
மாத ஊதியம்- மே மாத ஊதியம் வழங்கப்படும்
அப்போது, பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாத சம்பளம் ரூ.12,500- இல் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், கடந்த 13 ஆண்டுகளாக மே மாதம் பள்ளிகள் விடுமுறை காலத்தில் அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாத நிலையில், தற்போது அந்த சம்பளம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் இந்த முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க: அமைச்சர் நேரு துறையில் ரூ.1000 கோடி ஊழல்?தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!