ரீல்ஸ் மோகத்தில் மனைவி.. மதுபோதையில் மனைவியை கத்தியால் குத்திய கணவர்..
Chennai Crime: சென்னை கொருக்குப்பேட்டையில், மனைவி தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் பார்த்தும் பதிவேற்றம் செய்து வந்த நிலையில், அதனை பிடிக்காத கணவர் மது போதையில் மனைவியிடம் சண்டையிட்டு கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி அளித்த புகாரின் பேரில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பு புகைப்படம்
சென்னையில் 26 வயது நபர் தனது மனைவி இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக ரீல்ஸ் பதிவு செய்து வருகிறார் என்பதற்காக ஆத்திரமடைந்து கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மனைவி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ரீல்ஸ் மோகத்தில் மயங்கி உள்ளனர். சமூக வலைதள பக்கத்தை நாம் பார்க்க ஆரம்பித்தோம் என்றால் நேரம் போவதே தெரியாது. இதற்கு வயது வித்தியாசம் கிடையாது. இந்த சமூக வலைத்தளம் மூலம் ஏராளமான குற்ற சம்பவங்கள், குடும்பப் பிரச்சனைகள் என பல்வேறு விஷயங்கள் நடந்து வருகிறது.
ரீல்ஸ் மோகத்தில் மனைவி:
அந்த வகையில் கொருக்குப்பேட்டை சேர்ந்த 26 வயதான சங்கர் என்பவர் தின கூலி வேலை செய்து வருகிறார். அவரது மனைவி 22 வயது உடையவர். அவர் பிராட்வேயில் இருக்கக்கூடிய பழக்கடையில் வேலை செய்து வருகிறார். சங்கரின் மனைவி இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் வைத்திருந்ததாகவும், அதில் தொடர்ந்து ரீல்ஸ் பதிவேற்றம் செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் சங்கருக்கு சற்றும் உடன்பாடு கிடையாது. இதன் காரணமாக அவ்வப்போது சங்கர் தனது மனைவியிடம் கோபமாக பேசியுள்ளார்.
மனைவியை கத்தியால் குத்திய கணவர்:
ஆனால் அதை பொருட்படுத்தாமல் மனைவி தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்சை பகிர்ந்தும் பதிவேற்றம் செய்தும் வந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவதும் உண்டு. கடந்த வியாழன் அன்று அதாவது ஜூன் 19 2025 அன்று இரவு ஷங்கர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது மனைவி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த பொழுது இது தொடர்பாக வாக்குவாதம் நடைபெற்றது. வாக்குவாதம் சண்டையில் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஷங்கர் மது போதையில் கத்தியை எடுத்து குத்தியுள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்:
கத்தியால் குத்திய பெண் ஷங்கரின் மனைவி வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்டு உள்ளார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சங்கரின் வீட்டிற்கு வந்து அவரது மனைவியை அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சங்கரின் மனைவி ஆர் கே நகர் காவல் நிலையத்தில் மதுபோதையில் தனது கணவர் தன்னை கடுமையாக தாக்கி, கத்தியால் குத்தியதாக புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் சங்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.