தமிழகத்தில் குறையும் மழை.. அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை..
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சியில் 35.7 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 35 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 35 டிகிரி செல்சியஸ், மதுரையில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கோப்பு புகைப்படம்
வானிலை நிலவரம், பிப்ரவரி 28, 2026: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, பிப்ரவரி 28 தேதியான இன்று முதல் மார்ச் 5ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகம் முழுவதிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தை எடுத்துக் கொண்டோம் என்றால், அதிகபட்சமாக ஆயிக்குடி (தென்காசி) 7 செ.மீ., குண்டாறு அணை (தென்காசி) 4 செ.மீ., உபாசி TRF AWS (கோயம்புத்தூர்) 4 செ.மீ., வால்பாறை PTO (கோயம்புத்தூர்) 4 செ.மீ., செங்கோட்டை (தென்காசி) 4 செ.மீ., ராமநதி அணைப் பகுதி (தென்காசி) 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை:
பனிமூட்டத்தைப் பொருத்தவரையில், தமிழக கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் முதல் வாரத்தில் இருந்து கோடைக்காலம் தொடங்க உள்ள சூழலில், அதிகாலை நிலவக்கூடிய பனிமூட்டம் கணிசமாகக் குறைந்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை பகல் நேரங்களில் சற்று அதிகரித்து காணப்படுகிறது. அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது எனவும், ஆனால் சற்று உயர்ந்த பதிவாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… 12 பேர் ஜாமீன் திடீர் ரத்து… நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு!
குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், சற்று குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 டிகிரி பாரன்ஹீட்டை நெருங்கும் வெப்பநிலை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகக்கூட்டத்துடன் காணப்படலாம். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மக்களின் நம்பிக்கைகளை வாக்குகளாக மாற்ற வேண்டும்… திமுக மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேச்சு!
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 37.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சியில் 35.7 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூரில் 35 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 35 டிகிரி செல்சியஸ், மதுரையில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொருத்தவரையில், மீனம்பாக்கத்தில் 33.8 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 32.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.