வானிலை நிலவரம், ஏப்ரல் 27, 2026: தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. நாளுக்கு நாள் வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தை எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த சூழலில், அடுத்த ஏழு நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், இதே நிலை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சுமார் 0.9 கிலோமீட்டர் உயரத்தில் உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது.
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை:
இதன் காரணமாக, ஏப்ரல் 27ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளின் கடலோர இடங்களில் சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையே நீடிக்கும்.
அதேபோல், ஏப்ரல் 28ஆம் தேதியும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஏப்ரல் 30ஆம் தேதி தமிழகத்தின் சில இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
மே 1 மற்றும் மே 2 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை:
ஒருபுறம் மழை இருந்தாலும், மறுபுறம் வெப்பநிலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக கடலோர பகுதிகளில் சில இடங்களில் ‘அசௌகரியம்’ ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க: கண்களை கட்டி இழுக்கும் வண்ண மலர்கள்.. விரைவில் தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை நேரங்களில் ஓரளவு மேகமூட்டம் காணப்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும், சென்னையின் சில பகுதிகளில் அசௌகரியமான வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், மக்கள் வெப்ப அலை பாதிப்பிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள அதிக அளவில் நீர்ச்சத்து கொண்ட உணவுகள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.