எலெட்ரிக் வாகனம் இருக்கா? சென்னையில் 15 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்.. மாநகராட்சி அறிவிப்பு!
Chennai EV Charging Station : சென்னையில் 15 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என மேயர் பிரியா அறிவித்துள்ளார். இதற்கான பணிகளும் விரைவில் தொடங்கும் என தெரிவித்துள்ளது. அதன்படி, அண்ணா நகர், தேனாம்பேட்டை, அம்பத்தூர், கோடம்பாக்கம், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

சென்னை சார்ஜிங் நிலையங்கள்
சென்னை, மே 29 : சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க (EV Charging Stations) 15 இடங்களை மாநகராட்சி (Greater Chennai Corporation) நிர்வாகம் தேர்வு செய்துள்ளது. பெசன்ட் நகர், மயிலாப்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி தேர்வு செய்துள்ளது. சென்னையில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவது மின்சார வாகனங்கள். பெட்ரோல், டீசல் விலைகளை கருத்தி கொண்டு, மக்கள் பலரும் மின்சார வாகனங்களை தற்போது வாங்கி வருகின்றனர். ஆனால், இதுவரை பெருநகரங்களில் மட்டுமே மின்சார வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
சென்னையில் 15 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள்
இதனால், மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் 15 இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்கான இடங்களையும் தேர்வு செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் 2025 மே 28ஆம் தேதியான நேற்று நடைபெற்றது.
இதில், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, புதிய அறிவிப்புகள் வெளியாகின. அதன்படி, சென்னையில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெங்கு தெரியுமா?
வணக்கம் #Chennaiites,
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் தலைமையில் இன்று ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார் அவர்கள், ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன்,… pic.twitter.com/eUpJxMCbnR
— Greater Chennai Corporation (@chennaicorp) May 28, 2025
கடற்கரைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், தோட்டங்கள், ஏரிகள் மற்றும் அரசுக்குச் சொந்தமான பிற காலி நிலங்களில் சார்ஜிங் நிலையங்களை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு எடுத்துள்ளது.
சென்னை எழும்பூர் தேசிய கலைக்கூடம், அம்பத்தூர் மண்டலத்தில் மகரல் பூங்கா, சேத்துப்பட்டு பூங்கா, தேனாம்பேட்டை மண்டலத்தில் செம்மொழி பூங்கா, நாகேஸ்வர ராவ் பூங்கா, அடையாறு மண்டலத்தில் ஸ்ரீ அஷ்டலட்சுமி கோயில் பார்க்கிங், போகன் வில்லா பூங்கா ஆகிய இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
கூடுதலாக, மெரினா கடற்கரை பார்க்கிங், திருவான்மியூர் கடற்கரை பார்க்கிங், அடையாறு மண்டலத்தில் பெசன்ட் நகர் பார்க்கிங், கோடம்பாக்கம் மண்டலத்தில் சோமாசுதாரம் மைதானம், மாநகராட்சி விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களிலும் சார்ஜிங் நிலையங்களை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியார் பேசுகையில், “சென்னையில் 15 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். இதற்கு பொதுமக்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.