எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..
ZPlus Security For Edappadi Palanisamy: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மூன்று முறை வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் அவருக்கு இப்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 12 கமாண்டோ படை வீரர்கள், 52 காவலர்கள் என சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

எடப்பாடி பழனிசாமி, ஜூலை 5, 2025: தமிழக எதிர் கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமிக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்கனவே ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. சமீபத்தில் அவரது வீட்டிற்கு வெடி குண்டு மிரட்டல்கள் வருகின்றது. இந்த நிலையில் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதில் தொகுதி வாரியாக சென்று ரோட் ஷோ மேற்கொண்டு மக்களை நேரில் சந்திக்கிறார். இந்த பயணமானது வருகின்ற 2025 ஜூலை 7ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ஜூலை 7 2025 அன்று கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்கிறார். பின்னர் ஜூலை 23 2025 அன்று தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மாவட்டத்தில் அவரது முதற்கட்ட சுற்றுப்பயணத்தை முடிக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம்:
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்– முதல் கட்டம் #மக்களைக்_காப்போம்#தமிழகத்தை_மீட்போம்#EPSfor2026 pic.twitter.com/mim9bRx54P
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) July 5, 2025
மக்களை மீட்போம் தமிழகத்தை காப்போம் என்ற தலைப்பில் இந்த சுற்றுப்பயணத்தை அவர் மேற்கொள்கிறார். தொகுதி வாரியாக சென்று மக்களை நேரில் சந்தித்து மக்களுக்கான தேவைகள் என்ன என்பது குறித்து கேட்டு அறிகிறார். அதே போல ஒவ்வொரு தொகுதியில் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வழக்கமாக கார் அல்லது வேன் மூலம் பயணம் மேற்கொள்ளும் நிலையில் இந்த முறை எடப்பாடி பழனிச்சாமி பஸ்சில் பயணம் மேற்கொள்கிறார்.
எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு மூன்று முறை வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் அவருக்கு இப்போது இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கோரிக்கை முன்வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில் பாதுகாப்பை கருதி உள்துறை அமைச்சகம் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் 12 கமாண்டோ படை வீரர்கள், 52 காவலர்கள் என சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் இந்திய பிரதமருக்கு அடுத்து உயரிய பாதுகாப்பு இசட் ப்ளஸ் பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.