NLC ஊழல் விவகாரம்.. ரூ.422 கோடி முறைகேடு புகாரில் சிபிஐ அதிரடி விசாரணை.. சிக்கும் முக்கிய அதிகாரிகள்?
Neyveli NLC Scam CBI Investigating ; கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நெய்வேலி என். எல். சி. சுரங்கத்தில் ரூ.422 கோடி ஊழல் நிகழ்ந்தததாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர் .

என்எல்சி நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் ( பழுப்பு நிலக்கரி) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஒடிசா மாநிலத்தில் செயல்பட்டு வரும் தலபிரா அனல் மின் திட்டத்துக்கு ஒப்பந்தங்களை வழங்கியதாக கூறப்படுகிறது. அந்த ஒப்பந்தங்களில், மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் ஒப்பந்த நிபந்தனைகள் ஆகியவை மீறப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. மேலும், நகர்புற கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தங்கள் நியமன அடிப்படையில் தன்னிச்சையாக வழங்கப்பட்டதன் காரணமாக அந்த பணிகளுக்கான திட்ட செலவு ரூ.524.50 கோடியாக உயர்ந்தது. மேலும், என்எல்சி நிறுவனத்தில் சேகரமாகும் சாம்பலுக்கு சந்தை மதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. ஆனால், போக்குவரத்து ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஒரு டன் சாம்பலுக்கு ரூ.1 என்ற அடிப்படையில் முறைகேடாக ஒப்பந்தங்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளன.
என்எல்சி நிறுவனத்தில் ரூ.422 கோடி முறைகேடு
மேலும், சமூக நலத்திட்டங்களுக்காக செலவு செய்யப்படும் சமூக பொறுப்பு நிதியில் மிகப்பெரிய அளவு மோசடி நிகழ்ந்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்காக போலி அங்கீகார கடிதம் வழங்கப்பட்டதுடன், என்எல்சி நிறுவனத்தின் வங்கி பரிவர்த்தனைகளிலும் ஏராளமான முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. என்எல்சி சுரங்க வளாக பகுதியில் சுமார் 73 ஆயிரம் டன் அளவுக்கு சட்ட விரோதமாக செம்மண் வெட்டி எடுத்து கடத்தப்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளில் தற்போது வரை என்எல்சி நிறுவனத்தில் ரூ.422 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்னை சிபிஐ அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: விஜய் வேட்பு மனுவுக்கு எதிரான வழக்கு… நீதிமன்றம் அளித்த குட் நியூஸ்!
சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு
இந்த புகார் மனுவானது கடந்த 2025- ஆம் ஆண்டு ஜூலை மாதம் வழங்கப்பட்டிருந்தது. மேலும், இந்த புகார் மனு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், இதில், தொடர்புடைய அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதே நபர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை அண்மையில் நடைபெற்ற நிலையில், கடந்த 2022- ஆம் ஆண்டு முதல் 2025- ஆம் ஆண்டு வரை என். எல். சி. யில் ஊழல் நடந்திருப்பதாக மனுதாரர் வழக்கு தொடுத்துள்ளார்.
முதல் கட்ட விசாரணையில் சிபிஐ அதிகாரிகள்
இந்த விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் முதல் கட்ட விசாரணை மேற்கொண்டு, இதில், முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் முதல் கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். இதில், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை என அனைத்து தரப்பினரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..