செல்போனில் வீடியோ கேம் விளையாடிய சிறுவன்…பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு!
Salem Boy Suicide: சேலத்தில் அதிகமாக செல்போன் உபயோகித்ததை பெற்றோர் கண்டித்ததால் 7- ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் வீட்டில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தில் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
சேலம் மாவட்டம், திருமலைகிரி தோப்புக்காட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ். கூலித் தொழிலாளியான இவருக்கு, மனைவி மற்றும் தீனா என்ற ஒரு மகன் உள்ளனர். தீனா (11 வயது) அந்தப் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக, தீனா சரியாக படிக்காமல் அடிக்கடி செல்போன் உபயோகித்து வந்ததாகவும், செல்போனில் கேம்கள் விளையாடி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை, அவரது பெற்றோர் கடுமையாக கண்டித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று மாணவர் தீனா பள்ளி பாடங்களை படிக்காமல் பெற்றோரின் செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது, வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய அவரது பெற்றோர் மாணவர் தீனாவை கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது.
மின் விசிறியில் தூக்கிட்ட சிறுவன்
பின்னர், அவரது பெற்றோர் வீட்டில் உள்ள வேலைகளை பார்க்கத் தொடங்கி விட்டனர். பெற்றோர் திட்டியதில் மனம் உடைந்த தீனா வீட்டின் அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். இதனால், சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அறையின் கதவை திறக்குமாறு கூறியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, மாணவர் தீனா மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் இருப்பதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் படிக்க: போலீஸ் வாகனத்தில் பிரபல ரவுடியை கொலை செய்ய முயற்சி… போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு – பரபரப்பு சம்பவம்
மருத்துவர்கள் பரிசோதித்ததில் மாணவர் உயிரிழப்பு
உடனே, மாணவர் தீனாவை அவரது பெற்றோர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அங்கேயே கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதைத் தொடர்ந்து, மாணவரின் சடலம் உடல் கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சிறுவர்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு அதிகரிப்பு
இது தொடர்பாக தீனாவின் தந்தை வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் உபயோகித்ததை பெற்றோர் கண்டித்ததால், மனமுடைந்த 11 வயது சிறுவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் மத்தியில் செல்போன் புழக்கம் அதிகரித்து வருவது பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுக்கிறது.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050).
மேலும் படிக்க: குடியரசு தினவிழா…காவல்துறையின் முழு கட்டுப்பாட்டில் சென்னை…7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!