வானிலை நிலவரம், மார்ச் 14, 2026: தமிழகத்தில் கடந்த வாரம் தொடங்கி தற்போது வரை வெப்பநிலையின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சில மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கரூரில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 37.2 டிகிரி செல்சியஸ், சேலத்தில் 37.2 டிகிரி செல்சியஸ், மதுரையில் 37 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 36.0 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 36.8 டிகிரி செல்சியஸ், தர்மபுரியில் 36.5 டிகிரி செல்சியஸ் மற்றும் திருப்பத்தூரில் 35.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 34.3 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 32.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், வரவிருக்கும் நாட்களிலும் வெப்பநிலையின் தாக்கம் இதேபோல் நீடிக்கும் என்றும், சில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு:
இதற்கிடையில் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ்மட்ட சுழற்சி நிலவுகிறது. அதேபோல் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல கீழ்மட்ட சுழற்சியும் நிலவி வருகிறது.
இதன் காரணமாக மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சாரல் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நேரத்தில், தமிழகத்தின் பிற பகுதிகளில் வரண்ட வானிலை நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மார்ச் 16ஆம் தேதி ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் லேசான மழை பதிவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மார்ச் 17ஆம் தேதியைப் பொறுத்தவரையில், தென் தமிழகம் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆனால் வடக்கு கடலோர தமிழகம் பகுதிகளில் பெரும்பாலும் வரண்ட வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மானாமதுரையில் கைதி லாக் அப் டெத்… 6 போலீசார் மீது பாய்ந்த நடவடிக்கை… டிஐஜி சரவணன் அதிரடி உத்தரவு!
அதிகரிக்கும் பகல் நேர வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரையில், வரவிருக்கும் நாட்களில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், சில இடங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் குறைந்தபட்ச வெப்பநிலையிலும் பெரிய மாற்றம் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழைக்கான வாய்ப்பு இல்லை. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.