சொத்துக்காக தந்தையை மிரட்டிய மகள்கள்.. ரூ. 4 கோடி சொத்தை உண்டியலில் போட்ட முன்னாள் ராணுவ வீரர்!
Ex-Army Officer Property Donation: ஆரணி அருகே, குடும்பச் சண்டையால் மிரட்டப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் விஜயன், ரூ. 4 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்களை ரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் செலுத்தினார். மகள்களின் மிரட்டலால் அச்சம் அடைந்த அவர், சொத்தை கோயிலுக்கு மாற்றி எழுதித் தருவதாகக் கூறினார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் இந்திய இராணுவ வீரர் விஜயன்
ஆரணி, ஜூன் 24: ஆரணியில் (Arani) குடும்ப சண்டை காரணமாக தனது ரூ.4 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரத்தை முன்னாள் ராணுவ வீரர் (EX – Army Officer) விஜயன் என்பவர் படவேடு ரேணுகாம்பாள் கோயில் உண்டியலில் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆரணி அருகே தனது சொத்துக்காக 2 மகள்களும் மிரட்டியதால், ரூ. 4 கோடி மதிப்புள்ள சொத்தை கோயில் உண்டியலில் செலுத்தியுள்ளார். உண்டியல் எண்ணும்போது, இதை கவனித்த கோயில் நிர்வாக அதிகாரிகள் விஜயனை சேர்த்து அழைத்து விசாரித்தபோது, விரைவில் சொத்தை கோயில் பெயருக்கே மாற்றி எழுதித்தருவதாக கூறியுள்ளார். இருப்பினும், பத்திரத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென உரிமை கோரும் மகள்களால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் என குற்றம் சாட்டியுள்ளார்.
என்ன நடந்தது..?
சொத்துக்காக மகள்கள் மிரட்டியதால் தந்தையான முன்னாள் ராணுவ வீரர் விஜயன் அவரின் வீட்டருகே உள்ள ரேணுகாம்பாள் கோயிலில் ரூ. 4 கோடி மதிப்பிலான 2 வீட்டு பத்திரங்களை காணிக்கையாக செலுத்தியுள்ளார். உண்டியல் எண்ணும்போது இதை எதார்த்தமாக கவனித்த கோயில் அதிகாரிகள் விஜயனை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இதைதொடர்ந்து, முன்னாள் ராணுவ அதிகாரி விஜயன் விரைவில் சொத்தை கோயில் பெயருக்கே மாற்றி எழுதித்தருவதாக தெரிவித்துள்ளார். இதையறிந்த மகள்கள், தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.
ரூ. 4 கோடி சொத்துக்களை உண்டியலில் போட்டது ஏன்..? விஜயன் விளக்கம்:
ரூ. 4 கோடி சொத்துக்களை உண்டியலில் போட்டது ஏன் என்று முன்னாள் ராணுவ வீரர் விஜயன் தெரிவிக்கையில், “இதுவரை அப்பா என்று என்னை அழைத்தது கிடையாது, என்னை நினைத்ததும் கிடையாது. அதனால், எனது சொத்துகள் அனைத்ததும் என் வீட்டிற்குள் இருக்கும் ரேணுகாம்பாள் கோயிலுக்கு கொடுத்துவிடாமல் நினைத்து, கோயில் உண்டியலில் பத்திரங்களை போட்டுவிட்டேன். இது தெரிந்த என் மகள்கள், ஒரு 15 பேருடன் வந்து எங்களது பங்கை எனக்கு கொடுங்கள் என்று மிரட்டினார்கள். அதற்கு நான் என் சொத்துகளை தருகிறேன் என்று சொன்னாலும், வீட்டிற்குள் இருக்கும் என்னை வெளியே வர சொல்லி மிரட்டுகிறார்கள்.
அப்போது, உன் சொத்துகளை வாங்குவதற்கு எதற்கு இத்தனை நபர்கள்..? நம் குடும்ப பிரச்சனைக்குள் எதற்கு வெளிமனிதர்கள் என்று கேள்வி எழுப்பினேன். ஏன் நீ மிலிட்டரிகாரன் தான உன்னால இத்தனை பேருடன் சண்டை போட முடியாத என்று கேட்டனர். மிலிட்டரிகாரன் என்றால் என்ன..? இப்போது எனக்கு 60 வயதாகிவிட்டது என்றேன். அந்த நேரத்தில், என்னிடம் சண்டை போடுங்கள் என்று என் மகள்கள் வம்பு இழுத்தனர். என்னால் சண்டை எல்லாம் போட முடியாது என்று தெரிவித்தேன்.” என்றார்.