சிறுமியை திருமணம் செய்த சிறுவன்.. விடாமல் துரத்திய காவல்துறை.. ஈரோட்டில் சம்பவம்!
Erode Crime : ஈரோடு மாவட்டத்தில் வீட்டில் இருந்த சிறுமியை கடத்தி சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்ததாக சிறுவனை பவானி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அந்த சிறுவன் கூர் நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இதே பகுதியில் உள்ள அத்தாணி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். இதன் காரணமாக இருவருக்கிடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை கண்டித்துள்ளனர். மேலும், சிறுவனுடனான காதலை கைவிடுமாறு வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், அந்த சிறுமி தனது காதலை கைவிட மறுத்ததுடன், சிறுவனை நேரில் சந்திப்பதும், செல்போன் வழியாக பேசுவதுமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மே 3- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) திடீரென அந்த சிறுமி வீட்டில் இருந்து மாயமானார். இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் பல்வேறு இடங்களில் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், சிறுமி கிடைக்கவில்லை.
கோவிலில் திருமணம் செய்து கொண்ட சிறுவன் – சிறுமி
பின்னர், சிறிது நேரம் கழித்து சிறுமியின் பெற்றோருக்கு ஒரு தகவல் கிடைத்தது. அதில், அத்தாணி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் சிறுவன் மற்றும் சிறுமி ஆகியோர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. மேலும், அந்த சிறுமியை, சிறுவன் தனது வீட்டுக்கு அழைத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், அந்த சிறுவனின் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும், சிறுமியை தங்களுடன் அனுப்பி வைக்குமாறு அந்த சிறுவனிடமும், அவரது பெற்றோரிடமும் கூறியுள்ளனர். ஆனால், இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
மேலும் படிக்க: CM Vijay speech: நிதி எவ்வளவு? தமிழ்நாடு அரசின் நிலைமை என்ன? வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என உறுதியளித்த முதல்வர் விஜய்!




அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்
மேலும், இந்த சம்பவம் காரணமாக சிறுவன் மற்றும் சிறுமி குடும்பத்தினர் இடையே வாக்குவாத முற்றியது. இதனால், அந்தப் பகுதியில் கூடிய பொதுமக்கள் அவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், காவல் ஆய்வாளர் சுமதி சிறுவனின் வீட்டிற்கு நேரடியாக சென்று சிறுவன், சிறுமி மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார்.
சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில அடைக்கப்பட்ட சிறுவன்
இதில், சிறுமியை ஆசை வார்த்தை கூறி சிறுவன் திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, வீட்டில் இருந்த சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததாக சம்பந்தப்பட்ட சிறுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அந்த சிறுவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். 18 வயதுக்கு உட்பட்ட சிறுமியை, சிறுவன் திருமணம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: முதலமைச்சர் விஜய் vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.. அனல் பறக்கும் சட்டமன்றம்.. தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்!!