தவெக குறித்த கேள்வி…விமர்சிக்க மறுத்த எடப்பாடி பழனிசாமி!
EPS Refuses To Answer Question On TVK : தமிழக வெற்றிக் கழகம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி பதிலளிக்க மறுத்து விட்டார். மேலும், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் .
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திராவிட முன்னேற்ற கழகம் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. இந்த மக்கள் விரோத அரசை அகற்றுவதற்கு ஒத்த கருத்துடைய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையலாம். பொங்கல் பண்டிகைக்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில், பொங்கல் தொகுப்பு மற்றும் பொங்கல் பணம் வழங்குவது குறித்து திமுக அரசு இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை. எனவே, திமுகவின் கடைசி ஆட்சி காலத்தில் குடும்ப அட்டைக்கு ரூ. 5 ஆயிரம் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை நாள் அதிகரிக்கப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை அந்த அறிவிப்பு வெளியாகாத நிலையில், மத்திய அரசு 125 நாளாக வேலை நாட்களை அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் தேவைகளை திமுக எம்பிக்கள் வலியுறுத்த வேண்டும்
இதனை பாராட்டுவதற்கு திமுக அரசுக்கு மனமில்லை. 100 நாள் வேலை திட்டதின் பெயரை மாற்ற வேண்டாம் என்று அதிமுக கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்துக்கான தேவைகள் குறித்து திமுகவின் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும். காவிரி நீர் விவகார தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக செயல்படுத்தாத மத்திய அரசை கண்டித்து 22 நாட்கள் நாடாளுமன்றத்தை அதிமுக எம்பிக்கள் ஒத்தி வைத்தனர்.
மேலும் படிக்க: SIR | “தகுதியான ஒரு வாக்காளர் கூட விடுபட்டுவிடக் கூடாது”.. மா.செக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!




திமுக ஆட்சியில் கடன் சுமை அதிகரிப்பு
தமிழகத்தின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு நிதி மேலாண்மை நிபுணர் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்த குழு அமைக்கப்பட்ட பின்னர் தான் தமிழகத்தின் கடன் சுமை அதிகமானது. இதில், திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி கடன் இருந்தது. தற்போது, இந்த கடன் சுமை அதிகரித்துள்ளது.
கடன் வாங்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடம்
கடந்த 2011 முதல் 2021- ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் வறட்சி மற்றும் புயல் பாதிப்புகள், கொரோனா பெருந்தொற்று ஆகிய பேரிடர்களை சந்தித்தது. இவற்றையெல்லாம் அதிமுக ஆட்சி சரி செய்தது. கொரோனா காலத்தில் வருமானம் இல்லாத நேரத்தில் கூட ரூ. 40 கோடி செலவு செய்யப்பட்டது. தற்போதைய திமுக ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது. இந்தியாவிலேயே கடன் வாங்கும் முதல் மாநிலம் தமிழகமாக உள்ளது.
தவெக குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கடன் வாங்கியதே முதல்வர் மு. க. ஸ்டாலின் சாதனையாகும். தமிழக வெற்றிக் கழகம் தூய சக்தியா. தீய சக்தியா என்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க மறுத்து விட்டார். திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒரு பாக அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: நல்லது செய்ய அரசியல் வேண்டாம்.. நடிகர்களை குறிப்பிட்ட சிவராஜ்குமார்.. கொதிக்கும் தவெகவினர்!