கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரவுடி கொல்லப்பட்ட சம்பவம்…4 போலீசார் மீது பாய்ந்த நடவடிக்கை!
Kilpauk Government Hospital Rowdy Murder: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இன்ஸ்பெக்டர் மற்றும் சப்- இன்ஸ்பெக்டருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ரவுடி கொலை வழக்கில் 4 போலீசார் சஸ்பெண்ட்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் நேற்று திங்கள்கிழமை ( ஜனவரி 12) அதிகாலை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்த ரவுடியான ஆதி என்ற ஆதிகேசவனை மர்ம கும்பல் பயங்கரமான ஆயுதங்களால் வெட்டி கொலை செய்தது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தோழியை பார்க்க வந்த போது இந்த சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக 9 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், அலிபாய், கார்த்திக் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் நடந்த போது, அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த 4 போலீசார் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர். மேலும், கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாசன், சப் இன்ஸ்பெக்டர் துரை ஆகியவருக்கு மெமோ வழங்கப்பட்டுள்ளது.
போலீசார் மீது பாய்ந்த நடவடிக்கை
கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, நிகழ்ந்த கொலை சம்பவத்தை தடுக்காமல் இருந்ததாக அந்த 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாவும், இன்ஸ்பெக்டர் மற்றும் சப்- இன்ஸ்பெக்டருக்கு சம்பவம் நிகழ்ந்தது தொடர்பாக விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆதி கேசவனின் பெண் தோழியான சுசித்ரா பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மேலும் படிக்க: சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரபல ரவிடி வெட்டிக்கொலை.. அதிர்ச்சியூட்டும் பின்னணி.. 8 பேர் கைது..
தூக்கத்தில் பிரிந்த ரவுடியின் உயிர்
அப்போது, அவருக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. இதனால், மன வருத்தத்தில் இருந்து வந்த சுசித்ராவை பார்ப்பதற்காக ரவுடி ஆதிகேசவனும், அவரது மற்றொரு தோழியான சாருமதியும் ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜனவரி 11) மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அப்போது, அவர்கள் இருவரும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தங்கும் இடத்தில் படுத்திருந்தனர். அப்போது, நேற்று திங்கள்கிழமை காலை 6 பேர் கொண்ட கும்பல் ஹெல்மெட் அணிந்தவாறு பயங்கர ஆயுதங்களுடன் மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து ஆதி கேசவனை சரமாரியாக வெட்டி கொலை செய்தது.
ஆதிகேசவன் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்
பின்னர், வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறி தப்பி சென்று விட்டது. இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்யப்பட்ட ஆதிகேசவன் மீது சென்னை ராஜமங்கலம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட ஏழு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், ஆதி என்ற ஆதி கேசவன் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
மேலும் படிக்க: “வேலியே பயிரை மேய்ந்த கதை”..பெண்ணுக்கு அத்துமீறி பாலியல் தொல்லை…முதல் நிலை காவலர் கைது!