இது மட்டும் நடந்தால்… விராட் கோலி தன் முடிவை மாற்றிக்கொள்வார் – மைக்கேல் கிளார்க் கணிப்பு

Virat Kohli Return Prediction : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் போட்டிகள் வருகிற ஜுன் 20, 2025 அன்று முதல் துவங்கவிருக்கின்றன. இந்த நிலையில் விராட் கோலி தனது ஓய்வு முடிவை திரும்ப பெறுவார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்திருக்கிறார்.

இது மட்டும் நடந்தால்... விராட் கோலி தன் முடிவை மாற்றிக்கொள்வார் - மைக்கேல் கிளார்க் கணிப்பு

விராட் கோலி

Updated On: 

07 Jun 2025 19:49 PM

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் (IPL) கோப்பையை வென்றிருக்கிறது. அந்த அணியின் சார்பாக தொடர்ந்து விளையாடி வரும் விராட் கோலி போன்ற வீரர்களின் கடும் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி குறித்து பேசிய விராட் கோலி (Virat Kohli), ஆர்சிபி அணிக்காக தனது இளமை உட்பட அனைத்தையும் கொடுத்திருப்பதாக கண்ணீர் மல்க பேசியிருந்தார். இந்த வெற்றியை முழுதாக ஒரு நாள் கூட கொண்டாட முடியாத அளவுக்கு பெங்களூருவில் நடைபெற்ற துயர சம்பம் அமைந்து விட்டது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை முன்னிட்டு இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி வருகிற ஜூன் 20, 2025  அன்று நடைபெறவிருக்கிறது. சமீபத்தில் டெஸ்ட்டில் இருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்த நிலையில் அவர் விளையாடதது இந்திய அணிக்கு பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் கிரிக்கெட் தொடர்பான பாட்காஸ்டில் பேசிய ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் விராட் கோலி மீண்டும் டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது குறித்து ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.  அதன் படி  இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் செயல்திறன் கோலி மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதை முடிவு செய்யும் என்று பேசினார்.

கிளார்க் சொன்ன நிபந்தனை

பாட்காஸ்ட்டில் பேசிய மைக்கேல் கிளார்க், “இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மிக மோசமாக தோல்வியடைந்தால், உதாரணமாக, தொடரை 5-0 என இழந்தால்,  தேர்வாளர்கள் விராட் கோலி மீண்டும் அணியில் சேர வேண்டும் என்று நினைப்பார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கும் கோலி, அந்த அழுத்தத்திற்கு அடிபணிந்து தனது முடிவை மாற்றிக்கொள்ளலாம்” என்று கிளார்க் கூறினார்.  மேலும்  பேசிய அவர், டெஸ்ட் கிரிக்கெட் மீதான கோஹ்லியின் ஆர்வமும் அர்ப்பணிப்பும் அனைவரும் அறிந்த ஒன்று தான். அணி கடினமான சூழ்நிலைகளில் இருக்கும்போது அவர் நிச்சயம் தன் முடிவை மாற்றிக்கொள்வார். கோலி டெஸ்ட் கிரிக்கெட் பற்றி தன் காதலை பல முறை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் அதை கிரிக்கெட்டின் மிக உயர்ந்த வடிவமாகக் கருதுகிறார்,” என்று கிளார்க் கூறினார்.

விராட் கோலி குறித்து பேசிய மைக்கேல் கிளார்க்

 

சமீபத்தில், விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அவருடன் சேர்ந்து, ரோஹித் சர்மாவும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதனால் இந்திய அணி அனுபவமின்மையால் திணறியது.  தற்போது சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி, இங்கிலாந்து போன்ற வலுவான அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள காத்திருக்கிறது.  இந்த சூழலில் கிளார்க்கின் கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.