Shubman Gill: இளம் அணிதான்! அழுத்தம் இல்லை.. இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு முன் சுப்மன் கில் பேச்சு!
IND vs ENG Test Series: இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். அழுத்தமின்றி விளையாடப் போவதாகவும், தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ வேண்டும் எனவும் கூறினார். வெற்றிக்காக பேட்டிங்கை தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாகவும், ஐபிஎல் வெற்றியை விட டெஸ்ட் தொடர் வெற்றி மிகப் பெரியது என்றும் தெரிவித்தார்.

சுப்மன் கில்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் (IND vs ENG Test Series 2025) தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இந்திய அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முதன்முறையாக வழிநடத்தபோகும் கில், இங்கிலாந்து போன்ற கடுமையான சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. அப்போது சுப்மன் கில் (Shubman Gill), தானும் தனது அணியும் எந்தவிதமான சுமையுடனும் வரவில்லை என்றும், இந்தத் தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்துவதோடு, டெஸ்டில் வெற்றி பெற பேட்டிங்கை தியாகம் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
சுப்மன் கில் பேசியது என்ன..?
இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் தனது செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது”20 விக்கெட்டுகள் எடுக்காமல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியாது. எனவே, சிறந்த பந்து வீச்சாளர்களுடன் சென்றால், எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் டெஸ்ட் தொடரை வெல்வது ஐபிஎல் வெற்றி பெறுவதை விட மிகப் பெரியது. ஐபிஎல் ஒவ்வொரு ஆண்டும் வருகிறது, எங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வாய்ப்பு கிடைக்கிறது, ஆனால் டெஸ்ட் தொடரை வெல்வது அதைவிட மேலானது. நாங்கள் மீண்டும் ஒரு முறை லீட்ஸ் பிட்சை பார்த்துவிட்டு மூன்றாவது இடத்தில் யார் பேட்டிக் செய்வார்கள் என்பதை முடிவு செய்வோம். நானும் கௌதம் கம்பீரும் பேசி, நான்காவது இடத்தில் என்னை களமிறக்க விளையாட முடிவு செய்தோம்.” என்றார்.
சுப்மன் கில் பத்திரிக்கையாளர் சந்திப்பு:
💬 💬 It’s the biggest honour a player can get.
Shubman Gill shares his thoughts on becoming #TeamIndia‘s Test captain.#ENGvIND | @ShubmanGill pic.twitter.com/m4FQClnwbP
— BCCI (@BCCI) June 19, 2025
இந்தத் தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக தன்னை நிரூபிக்க விரும்புவதாகவும் பேசிய கில் “நான் பேட்டிங் செய்யச் செல்லும்போது, ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட விரும்புகிறேன். கேப்டன் பதவியைப் பற்றி யோசிக்க மாட்டேன், ஏனெனில் அது அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்தத் தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக மாற விரும்புகிறேன். இங்கிலாந்தில் இதுவரை இந்திய அணிக்கு நிகழ்ந்த பழைய முடிவுகளைப் பார்க்க மாட்டோம். பலர் நாங்கள் அனுபவமற்றவர்கள் என்று கூறுகிறார்கள், ஆனால் இதன் பொருள் நாங்கள் எந்த பழைய முடிவுகளின் அழுத்தம் சுமக்கவில்லை என்பதாகும்.” என தெரிவித்தார்.