Rishabh Pant Records: ரோஹித் சர்மாவின் சாதனை தகர்ப்பு.. தடாலடியில் தடம் பதித்த ரிஷப் பண்ட்!

IND vs ENG 1st Test: இந்திய அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, ரோஹித் சர்மாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனைகளை முறியடித்துள்ளார். அதிக சிக்ஸர்கள் மற்றும் 50+ ரன்கள் எடுத்தல் உள்ளிட்ட சாதனைகளை பண்ட் புதுப்பித்துள்ளார். அவரது 'பேக்ஃபிளிப்' கொண்டாட்டமும் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

Rishabh Pant Records: ரோஹித் சர்மாவின் சாதனை தகர்ப்பு.. தடாலடியில் தடம் பதித்த ரிஷப் பண்ட்!

ரிஷப் பண்ட்

Published: 

22 Jun 2025 08:16 AM

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் (Rishabh Pant) தனது ஆக்ரோஷமான பேட்டிங்கிற்காக, சின்ன சின்ன சேட்டைகளாலும் எப்போதும் செய்திகளில் இடம்பிடிப்பவர். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் (IND vs ENG 1st Test) போட்டியில் சதம் அடித்தது மட்டுமின்றி, பண்ட் தனது ‘பேக்ஃபிளிப் கொண்டாட்டத்திற்காக’ தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். பண்ட் ஐபிஎல் 2025ல் சதம் அடித்தபிறகு, முதல் முறையாக ‘பேக்ஃபிளிப் கொண்டாட்டம்’ செய்தார். இதன் பிறகு, ரிஷப் பண்ட் இங்கிலாந்துக்கு எதிராக ‘பேக்ஃபிளிப் கொண்டாட்டம்’ செய்துள்ளார். சதம் அடித்தது மட்டுமின்றி, டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகளையும் படைத்து, ரோஹித் சர்மா சாதனையையும் முறியடித்தார்.

ரோஹித் சர்மா சாதனை முறியடிப்பு:

முன்னாள் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கடந்த 2025 மே மாதம்தான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது ஓய்வுக்குப் பிறகு, இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட், ரோஹித் சர்மாவின் பல பெரிய சாதனைகளை முறியடித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் ரோஹித் சர்மா ஆவார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ரோஹித் சர்மா இதுவரை 40 போட்டிகளில் 56 சிக்ஸர்கள் அடித்தார்.

இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் போது ரோஹித் சர்மாவின் இந்த சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டிக்கு முன்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ரிஷப் பண்ட் 56 சிக்ஸர்களை அடித்திருந்தார். இதன் பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான அரைசத இன்னிங்ஸில் பண்ட் இரண்டு சிக்ஸர்களை அடித்தார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் பண்ட் இப்போது 58 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதன்மூலம், இந்திய அணியின் துணை கேப்டன் பண்ட் வெறும் 35 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

மற்றொரு சாதனை முறியடிப்பு:


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் மற்றொரு பட்டியலில் ரோஹித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி ரிஷப் பண்ட் சாதனை படைத்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் ரோஹித் சர்மா மொத்தம் 17 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். இந்த விஷயத்தில் ரிஷப் பண்ட் இப்போது ரோஹித் சர்மாவை பின்னுக்குத் தள்ளிவிட்டார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ரிஷப் பண்ட் 18 முறை சதத்தையும் சேர்த்து 50 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அதாவது ரிஷப் பண்ட் 14 அரைசதங்களையும் 4 சதங்களையும் அடித்துள்ளார்.