Vikram Singh: ரயிலில் கிடைக்காமல் போன மருத்துவ உதவி.. மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் மரணம்!
சத்தீஸ்கர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் விக்ரம் சிங் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மருத்துவ உதவி தாமதமானதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ரயில் பயணத்தின்போது அவருக்கு உடல்நிலை மோசமடைந்தது. சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் சென்று கொண்டிருக்கும்போது மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர் ஒருவர் மருத்துவ உதவி கிடைக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை உண்டாக்கியுள்ளது. சத்தீஸ்கர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் தான் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. பஞ்சாப் (Punjab) மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரான விக்ரம் சிங் (Vikram Singh), சக்கர நாற்காலியில் அமர்ந்து விளையாடும் கிரிக்கெட் போட்டிக்காக டெல்லி மாநிலத்தில் இருந்து மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியருக்குப் பயணம் செய்து கொண்டிருந்தப்போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின் போது விக்ரம் சிங்கின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. மேலும் பல அவசர அழைப்புகள் இருந்தபோதிலும், மருத்துவ உதவி சரியான நேரத்தில் கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் சிங் மறைவு
இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான செய்தியின்படி, “2025, ஜூன் 4ஆம் தேதியான புதன்கிழமை இரவு ஹஸ்ரத் நிஜாமுதீன் நிலையத்திலிருந்து சத்தீஸ்கர் எக்ஸ்பிரஸில் விக்ரம் சிங் உள்ளிட்ட அவரது அணியினரும் ஏறியுள்ளார்கள். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்படத் தொடங்கியுள்ளது. அதிகாலை 4.58 மணிக்கு உடல்நிலை மோசமடைய தொடங்கியுள்ள நிலையில் சரியாக 90 நிமிடங்கள் தாமதமாக ரயில் மதுராவை நெருங்கியதும் அவர் மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விக்ரம் சிங்கை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சக பயணிகளுக்கு எச்சரிக்கை
எங்கள் கண் முன்னே விக்ரம் சிங் உடல்நலக்குறைவு ஏற்பட்டு வலியால் துடித்தார். நாங்கள் உதவி கேட்டு தொடர்ந்து கூப்பிட்டோம், ஆனால் யாரும் வரவில்லை என்று அவருடன் ரயிலில் பயணித்த சக வீரர்களில் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மதுரா ரயில் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் விக்ரம் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தாமதமான உதவி கிடைக்க என்ன காரணம் என்பது குறித்து ரயில்வே அதிகாரிகளுடன் உள் விசாரணையை பற்றி வருகின்றனர்.




இந்த சம்பவம் இந்திய ரயில்வேயின் அவசர மருத்துவர் அழைப்புகளின் செயல்திறன் குறித்த கவலையை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. விக்ரம் சிங்கின் மறைவு சோகமானது என்றாலும், ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு இது ஒரு நினைவூட்டல் என அவருடன் அணியில் விளையாடும் ஒரு வீரர் கூறியுள்ளார். இதனிடையே விக்ரம் சிங்கிற்கு நடந்த இந்த சோக சம்பவம் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இந்திய ரயில்வே வாரியத்திடம் மாற்றுத்திறனாளிகள் நலன் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.