AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வேண்டியது நிறைவேறுமாம்! – பக்தர்களின் நம்பிக்கையாக திகழும் மாசாணியம்மன்!

கோவை அருகிலுள்ள ஆனைமலை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோயில் பக்தர்களின் நம்பிக்கைக்குரிய தலமாக திகழ்கிறது. கர்ப்பிணிப் பெண்ணின் மரணதண்டனைக்குப் பின் ஏற்பட்ட வறட்சியைத் தொடர்ந்து அம்மனுக்குக் கோயில் எழுப்பப்பட்டதாக வரலாறு உள்ளது. பெண்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் இக்கோயில் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வேண்டியது நிறைவேறுமாம்! – பக்தர்களின் நம்பிக்கையாக திகழும் மாசாணியம்மன்!
மாசாணியம்மன் திருக்கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 05 May 2025 13:04 PM IST

தமிழ்நாடு பல்வேறு ஆன்மீக தலங்களுக்கு புகழ்பெற்றது. இங்கு அனைத்து வகையான கடவுள்களுக்கும், அவர்களின் அவதாரங்களுக்கும் ஏற்ப கோயில்கள் அமைந்துள்ளது. சிறு தெய்வங்கள் தொடங்கி பெண் தெய்வங்கள் வரை ஒவ்வொரு குடும்பத்தினரும் தனித்தனியாக வழிபடும் வழக்கமும் உள்ளது. அப்படியாக கோவை மாவட்டம் (Coimbatore) பொள்ளாச்சி ஆனைமலை அருகே அமைந்திருக்கும் புகழ்பெற்ற மாசாணியம்மன் கோயில் (Arulmigu Masaniamman Temple) வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். பொள்ளாச்சியில் இருந்து தென்மேற்கு திசையில் 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆனைமலை அடிவாரத்தில் ஆழியாறு சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருக்கும் இந்த கோயில் பார்ப்பதற்கே நம் மனதை கவரும் வகையில் இருக்கும்.

இக்கோயிலானது காலை 6:00 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி வெளியூர் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பொதுமக்களும் அதிக அளவில் வருகை தருகிறார்கள்.

கோயில் உருவான வரலாறு

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆனைமலை நன்னூர் என அழைக்கப்பட்டு வந்தது. இந்த ஊரை நன்னன் எனும் அரசன் ஆண்டு வந்தான். அவன் தன் மாந்தோப்பில் பழங்களை பறிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை அறிவித்திருந்தான். இந்த மன்னருக்கு கோசர் என்ற படைத்தளபதி இருந்தார். கோசருக்கு சயணி என்ற ஒரு மகள் உண்டு. மிகுந்த அழகு கொண்ட அப்பெண்ணுக்கு வீரமிக்க ஒருவரை கோசர் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டார். அதன்படி மகிழன் என்பவரை தேர்ந்தெடுத்தார். இருவருக்கும் திருமணம் நடந்து வாழ்க்கை மிகவும் சிறப்பாக சென்றது. கருவுற்ற சயணியின் வளகாப்பை கோசர் வெகு விமர்சையாக செய்தார். நிறைமாத கர்ப்பிணியான சயணியை எட்டாவது மாதத்தில் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்ல கோசர் விரும்பினார். ஆனால் மகிழனுக்கு தனது மனைவியை பிரிய மனமில்லாமல் இருந்துள்ளது. குழந்தை பிறந்து சில மாதங்களிலேயேசயணியை திரும்பி அனுப்பி வைப்பதாக மகிழனுக்கு கோசர் வாக்குறுதி அளித்துவிட்டு சென்றார்.

ஊருக்கு வந்த சயணி தனது தோழிகளுடன் நீர்நிலையில் குளிப்பதற்காக சென்றாள். அப்போது அங்கு மாம்பழம் ஒன்று மிதந்து வந்தது. அதனை எடுத்து சாப்பிட்ட பிறகு தான் அது நன்னூர் மன்னனின் தோட்டத்து மாம்பழம் என தெரியவந்தது. விஷயம் அறிந்த மன்னர் சயணிக்கு மரண தண்டனை வழங்கினான். இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த மகிழன் தனது மனைவியை விடுவிக்குமாறு அதற்கு பதிலாக எடைக்கு எடை தங்கமும் பல யானைகளையும் தருவதாக வாக்குறுதி அளித்தான் ஆனால் எதையும் ஏற்காமல் சயணிக்கு மரண தண்டனையை மனன நிறைவேற்றி விட்டான் இதனால் கோபமடைந்த மகிழன் மன்னனை கொன்று விட்டு தானும் உயிர் துறந்தான் இவற்றையெல்லாம் அறிந்த படைத்தளபதி கோசர் தனது ஈட்டியை மார்பில் குத்திக்கொண்டு இறந்தார்.

இந்த சம்பவம் நடந்து சில காலம் ஊரில் மழை இல்லாமல் மக்கள் பெரும் அவதி அடைந்தனர் கர்ப்பிணிப் பெண்ணை மரண தண்டனை கொடுத்ததால் ஊரில் மழை இல்லை என்பதை உணர்ந்தவர்கள் அந்த பெண்ணிற்கு மண்ணில் சிலை எடுத்து பெண் தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். அவ்வாறு செய்தவுடன் மழை பெய்ததாகவும், அந்த தெய்வமே மாசாணி அம்மனாக  அழைக்கப்பட்டாள் என்பதும் வரலாறு உள்ளது.

கோயிலின் சிறப்புகள் 

பருவ வயதை அடையும் பெண்கள் பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். அவற்றிற்கெல்லாம் மாசாணி அம்மனிடம் வேண்டிக் கொண்டால் தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கையாக உள்ளது. ராமர் சீதையை மீட்க செல்லும்போது இந்த அம்மனை வணங்கி அருள் பெற்று சென்றுள்ளது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த அம்மன் மயானத்தில் சயனித்ததால் மயான சயணி என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் மாசாணி என்று மருவியதாக சொல்லப்படுகிறது.

இக்கோயிலில் பச்சிளம் மருந்து பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இதனை சாப்பிட்டு கருப்பு கயிறு கட்டிக் கொண்டால் நம்மை சுற்றி உள்ள தீவினைகள் விலகி குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பது ஐதீகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் உதிரிப்பூ மாலை, எலுமிச்சை மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் உடல் நலப் பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

மேலும் கோயில் வளாகத்தில் இருக்கும் நீதிக்கல்லில் மிளகாய் அரைத்து பூசினால் திருடு போன பொருட்கள் திரும்ப கிடைக்கும் என்றும் பில்லி சூனியங்கள் ஒன்றை விஷயங்கள் விலகும் என்றும் அதிகமாக இருக்கிறது.

வேண்டுதலும் … நேர்த்திக்கடனும்

உப்பாற்றின் வடக்கு கரையில் சுமார் 17 அடி நீளத்தில் படுத்த வாக்கில் நாகம், திரிசூலம், உடுக்கை, கபாலம் ஆகியவை ஏந்தி மாசாணியம்மன் அருள் பாலிக்கிறாள். இந்த கோயிலில் குடும்ப பிரச்சனை, மனக்கவலைகள் உள்ளிட்ட மற்ற பிரச்சனைகளுக்கும் பக்தர்கள் வேண்டிக் கொள்கிறார்கள். அவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவுடன் மாசாணி அம்மனுக்கு புடவை சாற்றி எண்ணெய் காப்பு செலுத்தி மாங்கல்யம், தொட்டில் கட்டுதல், ஆடு சேவல் போன்ற கால்நடைகளை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

மேலும் அங்கப்பிரதட்சணம், முடி காணிக்கை, அக்னிகுண்டம் இறங்குதல் ஆகிய நேர்த்திக்கடனும் செய்யப்படுகிறது. இந்த மாசாணி அம்மன் கோயிலில் மகாமுனிஸ்வரர், துர்க்கை, பேச்சி , மகிஷாசுரவர்த்தினி, சப்த கன்னியர்கள்,விநாயகர், புவனேஸ்வரி, கருப்பராயர், பைரவர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 18 நாட்கள் இக்கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. அதனை தவிர்த்து அமாவாசை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருவிழா போல மக்கள் கூட்டம் போடுவது சிறப்பான ஒன்றாகும் வாய்ப்பு கிடைத்தால் ஒரு முறை சென்று வாருங்கள்.

(மாசாணியம்மன் கோயில் பற்றி பதிவிடப்படும் ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளவைகளுக்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us