திருச்செந்தூர் முருகனுக்கு எழுதப்பட்ட கந்த சஷ்டி கவசம் உருவான கதை!

Kanda Sashti Kavasam: கந்த சஷ்டி கவசம், பால தேவராய சுவாமிகளால் இயற்றப்பட்டது. வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர், திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் மேற்கொண்டு, முருகப் பெருமானின் அருளால் கவசத்தை இயற்றினார். இக்கவசம் 270 வரிகளைக் கொண்டு, துதிப்போர்க்கு வல்வினை போம் எனத் தொடங்குகிறது.

திருச்செந்தூர் முருகனுக்கு எழுதப்பட்ட கந்த சஷ்டி கவசம் உருவான கதை!

கந்த சஷ்டி கவசம் உருவான கதை

Updated On: 

17 Jun 2025 11:34 AM

தமிழ் கடவுளாம் முருகனைப் (Lord Murugan) புகழ்ந்து பாட எண்ணற்ற மந்திரங்கள், திருநாமங்கள், திருப்புகழ் போன்ற பக்தி பாடல்கள் ஆகியவை உள்ளது. ஆனால் முருகன் என்றாலே நம் நினைவுக்கு வருவது கந்த சஷ்டி கவசம் தான் (Kanda Shasti Kavasam). துதிப்போர்க்கு வல்வினை போம் என தொடங்கும் 270 வரிகள் நிறைந்த அந்த பாடலானது பலருக்கு மனதிற்கு அத்துப்படியான பசுமரத்தாணி போல பதிந்த விஷயம். சிலருக்கு பாடல் முழுவதுமாக தெரியாவிட்டாலும் அது ஒலிக்கும்போது தெரிந்த வரிகளை பாராயணம் செய்து மன மகிழ்ச்சியடைவார்கள். இத்தகைய கந்த சஷ்டி கவசம் பாடலை எழுதியவர் பால தேவராய சுவாமிகள் ஆவார். அவர் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக கவசம் எழுதியுள்ளார். திருச்செந்தூருக்கு எழுதியதாக சொல்லப்படும் கந்த சஷ்டி கவசம் முடிவில் பழனி மலை பற்றியும் இடம் பெற்றிருப்பது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது.

பால தேவராய சுவாமிகள் பின்னணி

கந்த சஷ்டி கவசம் அருளிய பால தேவராய சுவாமிகள் தொண்டை மண்டலத்தில் உள்ள வல்லூர் என்ற பகுதியைச் சார்ந்தவர். இவர் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும், இவரின் தந்தை வீராசாமி பிள்ளை கணக்கராக பணியாற்றினார் எனவும் சொல்லப்படுகிறது. வீராசாமிக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத நிலையில் அவர் முருகனிடம் வேண்டுதல் வைத்து பால தேவராயரை பெற்றார் என கூறப்படுகிறது. பெரும் புலவராக திகழ்ந்த மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தனது தமிழ் இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்ட பால தேவராயர் அறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக கவசம் எழுதி முருகனின் பக்தியை வெளிக்காட்டியுள்ளார்.

கந்த சஷ்டி கவசம் உருவான கதை

பால தேவராயருக்கு ஒருமுறை தீராத வயிற்று வலி ஏற்பட்டது. பல சிகிச்சைகள் எடுத்தும் அந்த வலி குறைவதாக தெரியவில்லை. அதனால் தன்னால் வலியை பொறுத்துக் கொள்ள இனிய முடியாது என்ற முடிவுக்கு வந்த பால தேவராயர் நேராக திருச்செந்தூர் சென்று கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவுக்கு வந்துள்ளார். அவர் வந்த நேரம் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியிருந்தது. சரி அது முடிந்ததும் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவை தள்ளி வைத்துவிட்டு கந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ள தொடங்கினார்.

தினமும் கடலில் நீராடி விட்டு முருகனை நினைத்து அங்குள்ள மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்ய தொடங்கினார். அப்படியான சமயத்தில் அவருக்கு காட்சி கொடுத்த முருக பெருமான் வயிற்று வலியை போக்கியதோடு மட்டுமல்லாமல் கந்த சஷ்டி கவசத்தை எழுதுவதற்கு தேவையான அனுக்கிரகத்தையும் வழங்கினார்.

இப்படியாகத்தான் சஷ்டி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும் திருச்செந்தூரை பார்த்து சஷ்டியை நோக்க சரவண பவனார் என தொடங்கும் கந்த சஷ்டி கவசத்தை பால தேவராயர் எழுதினார். ஆனால் இந்த பாடல் இயற்றப்பட்டது ஈரோடு மாவட்டம் சென்னிமலை முருகன் கோவிலில் தான். அதனை குறிப்பிடும் வகையில் பாடல் வரிகளில் சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக என எழுதி இருப்பார். கந்த சஷ்டி கவசம் படிப்பதால்,  “எனக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. இதனை தீர்த்து வைக்க முருகன் நீ வரவேண்டும்” என அவரை அழைப்பதாக அர்த்தமாகும். அப்படி அதனை பாராயணம் செய்யும்போது முருகப்பெருமான் எங்கிருந்தாலும் உங்களை தேடி வருவார் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கையின் அடிப்படையில் இந்த கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எவ்வித அறிவியல் விளக்கமும் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)