Aani Thirumanjanam: ஆனி திருமஞ்சனம் விழா.. வீட்டிலேயே வழிபாடு செய்வது எப்படி?
ஆனி மாத உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஆனி திருமஞ்சன விழா, நடராஜர் கோயில்களில் சிறப்பாக நடைபெறும். 2025 ஜூலை 2 ஆம் தேதி இந்த விழா கொண்டாடப்படுகிறது. கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே வழிபடலாம். சிவனுக்கு பால், தண்ணீர், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடலாம்.

ஒரு வருடத்தை எடுத்துக் கொண்டால் 365 நாட்களும் இந்து மதத்தைப் பொறுத்தவரை ஏதேனும் ஒரு விசேஷ தினம் வந்து கொண்டேயிருக்கும். அந்த வகையில் நம்மிடம் உள்ள தீமைகளை அழிக்கும் கடவுளாக அறியப்படும் சிவபெருமானின் அவதாரங்களில் நடராஜரும் ஒருவர். நடராஜர் என்றாலே நம் அனைவருக்கும் சிதம்பரம் தான் நினைவுக்கு வரும். அதேசமயம் தமிழ்நாட்டில் உள்ள ரத்ன சபைகளில் நடராஜப் பெருமான் ருத்ர தாண்டவமும் ஆடியுள்ளார். இப்படியான நிலையில் இந்த நடராஜ பெருமானுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஆனி, மார்கழி, மாசி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களில் ஒருநாள் விஷேச வழிபாடு நடைபெறும். இவை நடராஜப்பெருமானுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆனி, மார்கழி மாதத்தில் வரும் விசேஷ நாட்களில் அதிகாலை வேளையில் பூஜை நடைபெறும். மற்ற 4 நாட்கள் மாலை வேளையில் வழிபாடு நடைபெறும்.
ஆனி திருமஞ்சன திருவிழா
அந்த வகையில் ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் ஷஷ்டியுடன் கூடிய திதியில் ஆனி திருமஞ்சனம் விழா நடராஜர் கோயிலில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். 2025 ஆம் ஆண்டுக்கான ஆனி உத்திர பெருவிழா ஜூலை 2 ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் வெகு விமரிசையாக வழிபாடு நடைபெறும். இதைத் தவிர அனைத்து சிவன் கோயில்களிலும் நடராஜர் சன்னதியில் இந்த வழிபாடு நடைபெறும்.
இந்த நாளில் நம்மில் சிலரால் கோயிலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படலாம். அவர்கள் வீட்டிலிருந்து வழிபாடு செய்வது எப்படி என்பது பற்றி நாம் காணலாம்.




வீட்டில் வழிபாடு செய்யும் முறை
ஆனி திருமஞ்சன நாளில் கணவரின் ஆயுள் கூட பெண்கள் சிவனை வழிபட்டால் அதற்குண்டான பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பொதுவாக சிவபெருமானுக்கு நடைபெறும் அபிஷேகங்கள் யாவும் 24 நிமிடங்கள் மட்டுமே நடக்க வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அவரின் அவதாரமாக உள்ள நடராஜப்பெருமானுக்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு குறையாமல் அபிஷேகம் நடைபெறுவது சிறப்பான ஒன்றாகும்.
இந்த நன்னாளில் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் அதிகாலையில் எழுந்து புனித நீராடி சுத்தமான ஆடை அணிந்து கொள்ள வேண்டும். பின்னர் பூஜை அறைக்கு சென்று வீட்டில் லிங்கம் அல்லது திருஉருவப் படம் வைத்திருந்தால் அதற்கு தண்ணீர் பால் அபிஷேகம் சந்தனம் ஆகியவை கொண்டு அபிஷேகம், ஆராதனை செய்யலாம். மேலும் இந்த பூஜையில் சிவனுக்குரிய வில்வ இலை படைத்து வழிபட வேண்டும்.
அது மட்டுமல்லாமல் வழிபாட்டின் போது சிவபெருமானுக்குரிய பக்தி பாடல்கள், மந்திரம் ஆகியவற்றை பாராயணம் செய்யலாம். எதுவும் முழுவதும் தெரியாது என்றால் ஓம் சிவாய நமக என்ற வார்த்தையை தொடர்ந்து உச்சரித்துக் கொண்டே இருப்பது சிறப்பான ஒன்றாகும். பின்னர் தீப,தூபம் காட்டி வழிபட்டால் எதிர்பாராத வகையில் செல்வ வளங்கள் மற்றும் நிம்மதியான வாழ்க்கை அமையும் என சொல்லப்படுகிறது குறிப்பாக திருமணமாகாத பெண்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் அவர்களுக்கு விரைந்து திருமணம் ஆகும் என்பதை நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.
(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல் விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)