AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வைகுண்ட ஏகாதசி – இன்று சொர்க்கவாசல் திறப்பு.. கோவிந்தா நாராயணா என்ற கோஷங்களுடன் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்..

Vaikunda Ekadesi: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் இந்த சொர்க்கவாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இந்த சொர்க்கவாசல்கள் திறக்கப்படும். மற்ற பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வைகுண்ட ஏகாதசி – இன்று சொர்க்கவாசல் திறப்பு.. கோவிந்தா நாராயணா என்ற கோஷங்களுடன் சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 30 Dec 2025 06:27 AM IST

வைகுண்ட ஏகாதசி, டிசம்பர் 30, 2025: மார்கழி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என அழைக்கப்படுகிறது. இந்த நாள் விஷ்ணு பகவானுக்கு உகந்த நாளாகும். வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் கோயில்களில் உள்ள பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படும். அதாவது ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் இந்த சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அப்போது இந்த வழியாகக் கடந்து சென்று சுவாமியை தரிசனம் செய்தால், செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய பிரதமையிலிருந்து ஏகாதசி திதி வரையில் பகல் பத்து உற்சவம் நடைபெறும். அப்போது ஒவ்வொரு நாளும் உற்சவர் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி அளித்து மக்களுக்கு அருள் பாலிப்பார். அதன் முடிவில் ஏகாதசி திதி அன்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி – சொர்க்க வாசல் திறப்பு:

இந்த வைகுண்ட ஏகாதசிக்கு பின்னால் பல கதைகள் உள்ளன. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்தான் பெருமாள் பள்ளி கொண்டார் என்றும், அங்கு இருக்கக்கூடிய சொர்க்கவாசல்தான் பிரதானமானது என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட சில கோயில்களில் இந்த சொர்க்கவாசல் உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இந்த சொர்க்கவாசல்கள் திறக்கப்படும். மற்ற பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வைகுண்ட ஏகாதசி அன்று இரவு முழுவதும் மக்கள் விழித்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். ஏகாதசி திதி என்பதால் இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்வார்கள்.

இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 30, 2025 அன்று அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து முடிந்து இன்று முதல் ரா பத்து சேவை தொடங்கியுள்ளது. இந்த வைகுண்ட ஏகாதசி இன்று தொடங்கி வரக்கூடிய ஜனவரி 8ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த 10 நாட்களுக்கு மட்டும் இந்த சொர்க்கவாசல் மக்கள் செல்வதற்காக திறந்து வைக்கப்படும்.

மேலும் படிக்க: சுபநிகழ்வுகளில் தேங்காய் உடைப்பது ஏன் என்று தெரியுமா?

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்:

இதற்காக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று இரவு முதலே ஏராளமான பக்தர்கள் வருகை தந்து ஆயிரம் கால் மண்டபத்தில் பரமபதம் விளையாடி, நோன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று காலை சரியாக 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அனைவரும் “நாராயணா, கோவிந்தா” என்ற கோஷங்களை முழங்க, உற்சவர் சுவாமியைப் பின்தொடர்ந்து சொர்க்கவாசல் வழியாகச் சென்று தரிசனம் மேற்கொண்டனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்:

திருச்சியைப் போலவே திருப்பதி ஏழுமலையான் கோயிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த வைகுண்ட ஏகாதசி வரையில் வி.ஐ.பி. தரிசனத்திற்கான பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடுத்துவரக்கூடிய மூன்று நாட்களுக்கு சர்வதரிசனம் செய்ய டோக்கன் வாங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மூன்று நாட்களுக்கு 300 ரூபாய் டிக்கெட், ஸ்ரீவாணி தரிசனம் மற்றும் பிற சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: வைகுண்ட ஏகாதசி: உங்கள் வீட்டில் கட்டாயம் வாங்க வேண்டிய சில பொருட்கள்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்:

சென்னையைப் பொறுத்தவரையில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் நேற்று இரவு முதலே பக்தர்கள் விழித்திருந்து பல்வேறு பாடல்களைப் பாடி, இன்று காலை 5.40 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும் “நாராயணா” முழக்கங்களை எழுப்பி சொர்க்கவாசல் வழியாகச் சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். இதன் மூலம் தமிழகத்தில் இன்று வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Follow Us