AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பக்தர் வெள்ளத்தில் மிதக்கும் சமயபுரம் மாரியம்மன் திருத்தேர்..!

Samayapuram Mariamman Chariot Festival: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க மிகச்சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளியதைத் தொடர்ந்து, கூடியிருந்த பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து நான்கு வீதிகளிலும் பவனி வந்தனர்.

பக்தர் வெள்ளத்தில் மிதக்கும் சமயபுரம் மாரியம்மன் திருத்தேர்..!
சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 14 Apr 2026 10:00 AM IST

தமிழகத்தின் சக்தி பீடங்களில் முதன்மையானதாகத் திகழும் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில், உலகப் புகழ்பெற்ற சித்திரை பெருந்திருவிழா கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தேரோட்டம் இன்று (ஏப்ரல் 14, 2026) பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர். இதையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருவிழா கொடியேற்றம் முதல் திருத்தேர் ஏறுதல் வரை

கடந்த வாரம் தொடங்கிய இந்த சித்திரை திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கற்பக விருட்சம், பூத வாகனம், ரிஷப வாகனம் என ஒவ்வொரு நாளும் வீதி உலா நடைபெற்ற நிலையில், விழாவின் 10-ம் நாளான இன்று அன்னை மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேருக்கு எழுந்தருளினார். அதிகாலை முதலே கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன. பின்னர், மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஓத, அம்மன் தேருக்கு எழுந்தருளிய காட்சி காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

தேர்வடம் பிடித்தலும் பக்தர்களின் பக்தி பரவசமும்

இன்று காலை சரியாக 10:31 மணி முதல் 11:30 மணிக்குள் மிதுன லக்கனத்தில் தேர்வடம் பிடித்தல் நிகழ்வு தொடங்கியது. “ஓசக்தி.. பராசக்தி..” என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளக்க, பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தேரை இழுத்துச் சென்றனர். பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தும் வகையில் மஞ்சள் நீர் தெளித்தும், உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றைத் தேரின் மீது வீசியும் வேண்டிக்கொண்டனர். கோவிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் தேர் பவனி வந்தபோது, வழிநெடுகிலும் திரண்டிருந்த மக்கள் கற்பூர ஆரத்தி எடுத்து அம்மனை வழிப்பட்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகள்

லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதால், சமயபுரம் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 2,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கவும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காகத் தற்காலிக குடிநீர் வசதிகள், நடமாடும் மருத்துவக் குழுக்கள் மற்றும் கூடுதல் பேருந்து வசதிகள் நகரின் முக்கியப் பகுதிகளிலிருந்து சமயபுரத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் தன்னார்வலர் பணி

இந்த ஆண்டு தேரோட்ட விழாவில் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும், தூய்மையைப் பராமரிக்கவும் கோவில் நிர்வாகம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றன. அன்னதானம் வழங்கும் இடங்களில் சுகாதாரமான முறையில் உணவு வழங்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர். விழாவின் நிறைவாக, இன்று மாலை தேர் நிலை நின்றவுடன் அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற உள்ளன. இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் தெப்பத் திருவிழா உள்ளிட்ட இதர வைபவங்களுடன் இந்த சித்திரை பெருந்திருவிழா இனிதே நிறைவடைய உள்ளது.

Follow Us