காட்டு யானைகளுடன் செல்பி…ஆக்ரோஷமான யானை…இளைஞருக்கு நேர்ந்த கதி!
Young Man Died Elephant Attack : ஜார்க்கண்ட் மாநிலத்தில் காட்டு யானைகளுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரை ஆக்ரோஷம் அடைந்த யானை காலால் மிதித்து கொன்றது . இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, வனத்துறை பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது .

காட்டு யானை தாக்கி இளைஞர் பலி
ஜார்க்கண்ட் மாநிலம், ராம்கர் மாவட்டம், கெட்லா கிராமத்தைச் சேர்ந்தவர் அமித் குமார் ராஜ்வர். இவர், அந்தப் பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் கூட்டமாக நின்று கொண்டிருந்த 8 காட்டு யானைகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, ஆர்வ மிகுதியால் காட்டு யானைகளின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது, யானைகள் கூட்டத்தில் இருந்த ஒரு யானை ஆக்ரோஷம் அடைந்து அமித் குமாரை வேகமாக விரட்ட தொடங்கியது. இதனை சற்றும் எதிர்பாராத, அமித் குமார் மரண பீதியில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால், எதிர்பாராத விதமாக கால் இடறி கீழே விழுந்த அமீத் குமாரை யானை தனது காலால் மிதித்து கொன்றது. இந்தச் சம்பவம் ராம்கர் மாவட்டத்தின் மண்டு தொகுதியில் உள்ள ஆரா தெற்கு பகுதியில் நடந்தது.
வனத்துறை பல முறை எச்சரிக்கை
இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதேச வன அதிகாரி நிதீஷ் குமார் கூறுகையில், பொதுமக்கள் காட்டு யானைகளின் அருகே செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் பலமுறை ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதையும் மீறி பொதுமக்கள் காட்டு யானைகளிடம் நெருங்கி சென்று தாக்குதலுக்குள்ளாகி உயிரிழக்கின்றனர்.
மேலும் படிக்க: இளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. காதலன் உட்பட 3 பேர் கைது.. பகீர் சம்பவம்!
காட்டுப் பகுதியில் சுற்றித் திரியும் 42 யானைகள் கூட்டம்
பொகாரோ மற்றும் ராம்கர் மாவட்டங்களின் எல்லையில் உள்ள காடுகளில் சுமார் 42 யானைகள் பல்வேறு குழுக்களாக சுற்றி வருவதாக நிதீஷ் குமார் தெரிவித்தார். இதே போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு கரஞ்சியா வனப்பகுதியின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் நரசந்த் சோபா கிராமத்தில் யானையை பார்க்க முயன்ற ஒரு இளைஞர் அதே யானையால் மிதித்துக் கொல்லப்பட்டார்.
30 யானைகள் கூட்டத்தை பார்க்க முயன்ற மற்றொரு இளைஞர்
ஜார்கண்டில் இருந்து காகர்பேடா பகுதிக்குள் வழி தவறி வந்த யானை கூட்டத்தை பார்க்க கூடியிருந்த உள்ளூர் வாசிகள் குழுவில் அந்த இளைஞர் சேர்ந்துள்ளார். அப்போது, அந்த வழியாக சுமார் 30 யானைகள் நடந்து சென்றன. இதை பார்ப்பதற்காக உள்ளூர் வாசிகள் அதிக அளவில் அங்கு குவிந்தனர்.
பொது மக்கள் காப்பாற்ற முயன்றும்…
இதில், அந்த இளைஞர் மட்டும் யானையின் அருகே சென்றதால், ஆக்ரோஷம் அடைந்த அந்த யானை அந்த இளைஞரை துதிக்கையால் தூக்கி வீசி காலால் மிதித்து கொன்றது. அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சித்த போதும், எதிர்பாராத விதமாக அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது.
மேலும் படிக்க: 19 பேரை பலி வாங்கிய உபி சாலை விபத்து.. உடல்களை அடையாளம் காணுவதில் நீடிக்கும் சிக்கல்!