Viral Video : பெண்ணை அறைந்த ரேபிடோ ஓட்டுநர் – ‘உன் நாட்டுக்கே போ’ எனக் கூறி வாக்குவாதம்

Passenger Assault Incident : கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் பெண்ணை அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பெண்ணுடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் அவரை உங்கள் நாட்டுக்கு போ என கூறியிருக்கிறார். இந்த வீடியோ வைரலான நிலையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Viral Video : பெண்ணை அறைந்த ரேபிடோ ஓட்டுநர் - உன் நாட்டுக்கே போ எனக் கூறி வாக்குவாதம்

பெண்ணை கன்னத்தில் அறைந்த ரேபிடோ ஓட்டுநர்

Updated On: 

16 Jun 2025 19:40 PM

கர்நாடகா (Karnataka) மாநிலம் பெங்களூருவின் (Bengaluru) ஜெயாநகர் பகுதியில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பரவி வருகிறது. ரேபிடோ (Rapido) பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், ஒரு பெண் பயணியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு பிறகு, அவரை அறைந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.  பெண் ஒருவர் ரேபிடோ பைக் டாக்ஸியில் பயணத்திருக்கிறார். இந்த நிலையில் ஓட்டுநர் பைக்கை சரியாக ஓட்டவில்லை என்று கூறி நடு வழியில் இறங்கியிருக்கிறார். பின்னர் டிரைவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அந்த பெண் ஆங்கிலத்தில் பேச, டிரைவர் கன்னடத்தில் பேசுகிறார். இதனால் இருவருக்கும் புரிதல் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பெண் கட்டணம் செலுத்த மறுத்ததாகவும், ஹெல்மெட்டை திருப்பி கொடுக்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் பெண்ணை அறைந்தார். அதன் காரணமாக நிலை தடுமாறி அந்தப் பெண் கீழே விழுந்தார்.

“உன் நாட்டுக்கே போ” – ஓட்டுநர் வாக்குவாதம்

அந்தப் பெண் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று கூறப்படும் நிலையில் டிரைவர் அந்தப் பெண்ணைப் பார்த்து உன் நாட்டுக்கே போ என்று கூறியிருக்கிறார்.  இந்த நிலையில் இந்த வீடியோ வைரலான நிலையில் ஓட்டுநர் சுஹாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து சுஹாஸ் காவல்துறையினரிடம், “பரபரப்பான சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது அந்த பெண் பைக்கை நிறுத்த சொன்னார்.  பின்னால் வரும் வாகனம் மோதக்கூடும் என்பதால் நிறுத்த முடியாது என்றேன், இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் எனது சட்டையின் காலரை பிடித்து, என்னை கேவலமாக பேசினார். மேலும், ‘அந்தப் பெண் என்னை டிபன் பாக்ஸால் இரண்டு முறை அடித்தார். அதனால்தான் நான் பதிலடி கொடுத்தேன்” என்றார்.

வைரலாகும் வீடியோ

 

இந்த சம்பவத்தில் போலீசார் ஓட்டுநர் சுஹாசை கைது செய்ததுடன், பெண்ணிடம் எஃப்ஐஆர் பதிவு செய்ய கூறியதாகவும், ஆனால் பெண் இந்த பிரச்னையை பெரிதாக்க விரும்பவில்லை என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் போலீசார் தீவிர குற்றம் அல்லாத பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணை தொடர்கிறது.

பைக் டாக்ஸிகளுக்கு எதிரான நடவடிக்கைகள்

சமீபத்தில் கர்நாடக உயர்நீதிமன்றம் பைக் டாக்ஸிகள் சட்டவிரோதம் எனக் கூறி அவற்றுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. தற்போது 12 வாரங்கள் கடந்த நிலையில், அரசு அவற்றை நிறுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி கூறியதாவது, ”மூன்று மாதங்களுக்கு முன் நீதிமன்றம் பைக் டாக்ஸிகள் சட்டவிரோதம் எனத் தீர்ப்பளித்தது. அவர்களுக்கு 6 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்களது கோரிக்கையை ஏற்று மேலும் 6 வாரங்கள் வழங்கப்பட்டது. இப்போது 12 வாரங்கள் முடிந்த நிலையில், அவர்கள் நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்று தெரிவித்தார்.