Bengaluru: திருமணத்தை மீறிய உறவு.. மனைவி கொலை.. கணவனை சிக்க வைத்த சட்டை
Bengaluru Crime News : பெங்களூருவில், திருமணத்தை மீறிய உறவு காரணமாக கணவன் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட சங்கர் மற்றும் மானசா தம்பதியினருக்கு மூன்று வயது மகள் உள்ளார். அச்சிறுமியின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.

பெங்களூரு குற்ற சம்பவம்
கர்நாடகா, ஜூன் 7: திருமணத்தை மீறிய உறவில் இருந்ததற்காக மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் கர்நாடகா மாநிலம் பெங்களூவில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்பது அனைவரது வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய கனவாகும். மிகப்பெரிய பொறுப்பு, இலட்சியம் என வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்துக்கு அடியெடுத்து வைக்கும் தம்பதியினர் இருவரும் சில நேரங்களில் தடம் மாறி போகும் கதையும், இதனால் நிகழும் தாக்குதல்கள், சித்ரவதை, கொலை உள்ளிட்ட சம்பவங்களும் எதிர்கால சந்ததியினருக்கு திருமண உறவின் மீது ஐயத்தை உண்டாக்கி விடுகிறது. அப்படியான ஒரு கொடூர சம்பவம் தான் பெங்களூருவில் நடைபெற்றுள்ளது.
சிக்க வைத்த சட்டை
சந்தபுரா-அனேகல் பிரதான சாலையில் சங்கர் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இரவு 11.30 மணியளவில் அவரை கடந்து சாலையில் சென்ற போலீசார் சங்கரின் சட்டையில் இரத்தக்கறை இருப்பதைக் கண்டு வாகனத்தை நிறுத்தி என்னவென்று விசாரித்துள்ளனர். அப்போதுதான் இருசக்கர வாகனத்தின் முன்பக்கம் காலியாக உள்ள இடத்தில் ஒரு பெண்ணின் தலை இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சங்கரை பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கர்நாடகாவின் ஹெப்பகோடியைச் சேர்ந்த மானசாவை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சங்கர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயது மகள் உள்ள நிலையில் இருவரும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்துள்ளனர். சங்கர் தனது குடும்பத்துடன் ஹீலலிகே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் தனது மனைவிக்கு திருமணத்தை மீறிய தொடர்பு இருப்பதை சங்கர் கண்டுபிடித்தார்.
சமாதானம் பேச வந்தவர் கொலை
இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் மானசாவை வீட்டை விட்டு வெளியேற சங்கர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி வெளியே சென்ற அவர், அருகிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் வசித்து வந்தார். இதற்கிடையில் மானசா தொடர்பில் இருந்த நபர் அதனை துண்டித்து விட்டு வாழ்க்கையில் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது. இதனால் வேறுவழியின்றி தவித்த மானசா, தனது மகளை காரணம் காட்டி சங்கருடன் மீண்டும் சமரசம் பேசி இணைந்துள்ளார். இதனிடையே நேற்று (ஜூன் 6,2025) இரவு நேரத்தில் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த சங்கர் அங்கிருந்த கோடரியை எடுத்து மனைவி மானசா தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணிக்கு சங்கர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சங்கர் – மானசா தம்பதியினரிடன் மகளின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.