10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை தேர்வு.. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு!

CBSE 10th Class Board Exam : 2026ஆம் ஆண்டு முதல் 10ஆம் வகுப்பு மாணவர்கக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதற்கட்ட தேர்வு பிப்ரவரி மாதமும், இரண்டாம் கட்ட தேர்வு மே மாதமும் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை தேர்வு.. சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பு!

மாணவர்கள்

Updated On: 

25 Jun 2025 19:00 PM

டெல்லி, ஜூன் 25 : புதிய கல்விக் கொள்கையின் (New Education Policy) அடிப்படையில், 2026ஆம் ஆண்டு கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ (CBSE Class 10 Board Exam) அறிவித்துள்ளது. மாணவர்கள் எழுதிய இரண்டு தேர்வுகளில் எது சிறந்ததோ அதை மதிப்பெண்ணாக எடுத்த கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனும் சிபிஎஸ்இ கீழ் நாடு முழுவதும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் இந்தி, ஆங்கிலம் மொழிகளை கொண்டு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தான், 10,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது தேர்வு முறையில் மிகப் பெரிய மாற்றத்தை சிபிஎஸ்இ  செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை தேர்வு

அதாவது, சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2026 கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு நடத்தப்படும் என அறிவித்துள்ளது.  புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், சிபிஎஸ்இ இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்ட அறிவிப்பின்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் கட்ட தேர்வு பிப்ரவரி மாதத்திலும், இரண்டாம் கட்ட தேர்வு மே மாதத்திலும் நடைபெறும். இரண்டு கட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் முறையாக ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் அறிவிக்கப்படும்.

முதல் கட்டத் தேர்வை மாணவர்கள் எழுதுவதும் கட்டாயம். ஆனால், இரண்டாம் கட்டத் தேர்வு விருப்பத் தேர்வாக இருக்கும். அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் ஆகிய மூன்று பாடங்களில் மாணவர்கள் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

சிபிஎஸ்இ அறிவிப்பு

இரண்டு தேர்வையும் மாணவர்கள் எழுதும் பட்சத்தில், எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று இருக்கிறார்களோ, அந்த மதிப்பெண்கள் இறுதி செய்யப்படும். அதே நேரத்தில், உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துணைத் தேர்வுகள், சிறப்பு தேர்வுகள் இருக்காது என கூறப்படுகிறது.

காரணம் என்ன?

இதுகுறித்து 2025 மே மாதம் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு வைப்பதன் மூலம் மாணவர்களின் மன அழுத்தம் குறையும். மாணவர்களிடையே தேர்வு தொடர்பான மன அழுத்தத்தைக் குறைப்பதை நோக்கமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், தேசிய கல்விக் கொள்கையை (NEP) செயல்படுத்துவதில் ஒரு முக்கிய படியாகும். ஜேஇஇ போன்ற தேர்வுகள் போலவே, மாணவர்கள் இரண்டு முறை தேர்வு எழுத அனுமதிப்பதன் மூலம், சிறந்த மதிப்பெண்களை பெற உதவும். இந்த சீர்திருத்தம் மன அழுத்தமில்லாத கற்றல் சூழலையும், மிகவும் சமநிலையான மதிப்பீட்டு முறையையும் நோக்கிய ஒரு முக்கிய படியாகும்” என தெரிவித்தார்.