இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு.. காரணம் என்ன? மீண்டும் எப்போது?
AXIOM 4 Mission Astronaut shubhanshu shukla : சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் 10ஆம் தேதியான இன்று விண்வெளி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லி, ஜூன் 10 : சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் ( shubhanshu shukla) பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2025 ஜூன் 10ஆம் தேதியான இன்று விண்வெளி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் 2025 ஜூன் 11ஆம் தேதியான நாளை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் இஸ்ரோ (ISRO) பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. உலக நாடுகளுக்கு இணையாக பல்வேறு சாதனைகளை இஸ்ரோ செய்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா நாசாவுடன் (NASA) ஒரு திட்டத்தில் இந்தியா இஸ்ரோ கைகோர்த்துள்ளது. ஆக்சியம்-4 (AXIOM 4 Mission) திட்டத்தின் கீழ் நாசாவுடன் இஸ்ரோ இணைத்து செயல்படுத்தி வருகிறார்.
இந்தியர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
இது மிஷன் ஆக்சியம்-4 என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆக்சியம் 4 திட்டம் மூலம் மூலம் இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர் விண்வெளி பயணம் மேற்கொள்ள உள்ளனர். நான்கு விண்வெளி வீரர்களும் ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்வார்கள்.




அங்கு 14 நாட்கள் இருந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த பயணம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பாதுகாப்பாக தரையிறங்குவது குறித்து ஆராய்ச்சிக்கு பெரிதும் உதவும்.
இந்த ஆக்சியம் 4 திட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் பெக்கி விட்சன், போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஜ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு ஆகியோர் பயணம் மேற்கொள்கின்றனர். இவர்கள் 4 பேரும் 2025 ஜூன் 10ஆம் தேதியான இன்று விண்வெளிக்கு புறப்பட இருந்தனர்.
காரணம் என்ன?
The #Ax4 crew is now scheduled to launch to the International Space Station on June 11 at 8:00 AM EDT from Launch Complex 39A at @NASAKennedy. Tune in for the launch broadcast starting at 5:55 AM EDT. pic.twitter.com/hUBZTcyXQD
— Axiom Space (@Axiom_Space) June 9, 2025
ஆனால், மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. எனவே, இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் 2025 ஜூன் 11ஆம் தேதியான நாளை பயணம் மேற்கொள்கின்றனர். 2025 ஜூன் 11ஆம் தேதியான நாளை மாலை 5.30 மணிக்கு ஆக்சியம் 4 திட்டத்திற்கான ராக்கெட் செலுத்தப்பட உள்ளது. இதன் மூலம், அடுத்த 14 நாட்களுக்கு இந்த குழு விண்வெளியில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.
யார் இந்த சுபான்ஷு சுக்லா?
1985 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்தவர் சுபான்ஷு சுக்லா. இவர் 1999ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று, தனது ராணுவப் பயிற்சியை முடித்தார். 2005 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு அகாடமியில் கணினி அறிவியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) விண்வெளி பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்
இது விண்வெளி அறிவியலில் அவரது அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தியது. 2006 ஆம் ஆண்டு இந்திய விமானப்படை அதிகாரியாக சுக்லா நியமிக்கப்பட்டார். அவரது தொடர்ச்சியான கடின உழைப்பின் அடிப்படையில், சுக்லா விரைவாகப் பதவி உயர்வு பெற்று மார்ச் 2024 க்குள் குரூப் கேப்டன் பதவியை அடைந்தார். இவர் 2,000க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி இருக்கிறார்.
இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்காக 2019ஆம் ஆண்டில் சுக்லா தேர்வு செய்யப்பட்டார். இப்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆக்சியம் 4 திட்டத்திற்கான தலைமை விண்வெளி வீரராக தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம், விண்வெளி செல்லும் இரண்டாவது இந்திய வீரர் இவரே ஆவார். 1984 ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த விங் கமாண்டர் ராகேஷ் சர்மாவுக்குப் விண்வெளிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.