கொரோனா தடுப்பூசிக்கும், இளம் வயதினரின் திடீர் மரணங்களுக்கும் தொடர்பா?.. எய்ம்ஸ் அறிக்கையில் வெளியான முக்கிய தகவல்கள்!
No Link Between COVID Vaccine and Youth Heart Attacks | கொரோனா தடுப்பூசி காரணமாக இளைஞர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீர் மரணங்கள் ஏற்படுவதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்த நிலையில், அது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி, டிசம்பர் 15 : இந்தியாவில் (India) கடந்தா சில ஆண்டுகளாக இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பூசி (Covid Vaccine) போடப்பட்டதற்கு பிறகு தான் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டதாகவும், இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு அதிகரிப்பதற்கு கொரோனா தடுப்பூசியே காரணம் என பல தரப்பினர் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர். இந்த நிலையில் தான் டெல்லி எய்ம்ஸ் (Delhi AIMS) மருத்துவமனை இது தொடர்பான ஆய்வில் இறங்கியது. சுமார் ஒரு ஆண்டு காலமாக நடைபெற்ற இந்த ஆய்வின் மூலம் வெளிவந்த உண்மைகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கொரோனா தடுப்பூசி தொடர்பான ஆய்வு – எய்ம்ஸ் மருத்துவர் விளக்கம்
கொரோனா தடுப்பூசி தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு குறித்து எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் அவரா சில முக்கிய விஷயங்களை கூறியுள்ளார். அதாவது, இளம் வயதினர் மத்தியில் திடீர் மரணங்கள் ஏற்படுகின்றன. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது இதயத்தின் செயல்பாடு நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே திடீர் மரணங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய மரணங்கள் இந்தியாவில் இதுவரை ஆணவப்படுத்தப்படவில்லை. எங்கள் ஆய்வின் முதற்கட்ட அறிக்கையில் இவற்றை ஆவணப்படுத்தியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : சிறந்த மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்கும் செயற்கைக்கோள்.. இஸ்ரோவின் அடுத்த மைல்கல்




திடீர் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை
இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளதற்கும், கொரோனா தடுப்பூசிக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்துள்ள மருத்துவர்கள், எங்கள் ஆய்வை தொடங்குவதற்கு முன்பு இதற்கான சாத்தியங்களையும் நாங்கள் கவனத்தில் எடுத்து கொண்டோம். ஆனால், ஆய்வின் முடிவில் கிடைத்திருக்கும் தகவலின்படி, கொரோனா தடுப்பூசிக்கும், இளம் வயதினரின் திடீர் மரணத்திற்கும் தொடர்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : சபரிமலை: பக்தர்கள் மீது டிராக்டர் மோதி விபத்து.. 2 தமிழர்கள் உட்பட 9 பேர் காயம்
இளம் வயதில் மாரடைப்பு ஏற்படுவதற்கு இன்றைய வாழ்க்கை முறை, மதுப்பழக்கம் ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன. இது குறித்து தனித்தனியாக, விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். ஆனால், கொரோனா தடுப்பூசிக்கும், இளம் வயதினரின் திடீர் மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எங்கள் ஆய்வில் தெளிவாக தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.