Ahmedabad Air India Crash: அகமதாபாத் விமான விபத்து குறித்த உண்மை எப்போது வெளிவரும்..? போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் விளக்கம்!

Aviation Minister Ram Mohan Naidu: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 274 பேர் உயிரிழந்தனர். DGCA செய்தியாளர் சந்திப்பில், விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானி மேடே அழைப்பு விடுத்ததாகவும், தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Ahmedabad Air India Crash: அகமதாபாத் விமான விபத்து குறித்த உண்மை எப்போது வெளிவரும்..? போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் விளக்கம்!

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு

Updated On: 

14 Jun 2025 19:14 PM

டெல்லி, ஜூன் 14: கடந்த 2025 ஜூன் 12ம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் (Air India Crash) புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை மொத்தம் 274 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், இந்த அகமதாபாத் விமான விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு (Aviation Minister Ram Mohan Naidu), குஜராத் மாநில அமைச்சர் முரளிதர் மொஹோல் மற்றும் விமானப் போக்குவரத்து செயலாளர் சமீர் குமார் சின்ஷா ஆகியோர் இன்று அதாவது 2025 ஜூன் 14ம் தேதி புதுடெல்லியில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, வில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில் இரங்கல் தெரிவிப்பதாகவும், இந்த சம்பவம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு விளக்கம்:

அகமதாபாத் விமான விபத்து குறித்து ராம் மோகன் நாயுடு கூறுகையில், “விமான விபத்து பற்றிய செய்தி சுமார் 2 மணிக்கு எங்களுக்கு கிடைத்தது. இது திட்டமிடப்பட்ட விமானம் ஆகும். 2025 ஜூன் 12ம் தேதி மதியம் 1.39 மணிக்கு விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டவுடன், விமானி MAYDAY-க்கு அழைத்தார். ATC-யின் கூற்றுப்படி, விமானத்துடனான தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை. சுமார் ஒரு நிமிடத்தில் விமானம் விபத்துக்குள்ளானது. விபத்துக்குப் பிறகு, அகமதாபாத் விமான நிலையத்தின் ஓடுபாதை மதியம் 2.30 மணிக்கு மூடப்பட்டு, மீண்டும் மாலை 5 மணிக்கு தொடங்கப்பட்டது. மாலை 6 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. விபத்து நடந்த சில நிமிடங்களிலேயே மீட்பு குழு உள்பட அனைத்து குழுவும் அங்கு சென்றுவிட்டது.

விபத்து நடந்த சில மணிநேரத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டது. அதேநாளில் இருந்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் விசாரணையை தொடங்கியது. அதனை தொடர்ந்து, கருப்புப் பெட்டி கண்டிபிடிக்கப்பட்டு விசாரணை சுமூகமாக நடைபெற்று வருகிறது. கருப்பு பெட்டியில் உள்ள தகவல்கள் மூலம் விமான விபத்துக்கான உண்மையான காரணங்கள் தெரியவரும். விபத்துக்கான காரணத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. விமான விபத்து புலனாய்வுப் பணியகம் கருப்பு பெட்டியை ஆய்வு செய்து வருகிறது. அதன் அறிக்கைக்காக நாங்கள் காத்திருக்கிறோம். விமான விபத்து தொடர்பான உயர்மட்டக் குழுவின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.” என்றார் .

விபத்தில் தந்தையை இழந்தேன் – அமைச்சர்

அகமதாபாத் விமான விபத்து அனைவரையும் உலுக்கியுள்ளது. சாலை விபத்தில் என் தந்தையை இழந்தேன். அதனால், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் உடனடியாக அங்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை பார்த்தேன்” என்றார்.