ஜம்மு & காஷ்மீரில் கடும் பனியால் மூடிய சாலை.. சிக்கி தவித்த பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 60 பேர் மீட்பு!
60 Rescued In Jammu and Kashmir | ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பனியால் சாலை மூடிய நிலையில், அங்கு சிக்கி தவித்த 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர், ஜனவரி 28 : ஜம்மு மற்றும் காஷ்மீரில் (Jammu and Kashmir) தீவிர பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக அங்கு தற்போது “சில்லாய் கலான்” என்ற பனிப்பொழிவு காலம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக காஷ்மீர் வெள்ளை நிற போர்வை போர்த்தியது போல உள்ளது. காஷ்மீரின் முக்கிய பகுதிகளான ஸ்ரீநகர், புத்காம், பாராமுல்லா, குப்வாரா, சோபியான், புல்வாமா ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வாருகிறது.
பனிப்பொழிவில் சிக்கி தவித்த 60 பேர்
இவ்வாறு காஷ்மீர் மிக கடுமையான பனிப்பொழிவை எதிர்க்கொண்டு வரும் நிலையில், தோடா மாவட்டத்தில் ஜனவரி 23, 2026 அன்று சுமார் 40 மணி நேரம் தொடர் பனிப்பொழிவு நீடித்தது. இதன் காரணமாக அந்த மாவட்டத்தை இணைக்கும் சாலைகளில் 38 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 6 அடி உயரத்திற்கு பனி படர்ந்து இருந்துள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், சதேர்கலா பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் ராஷ்டிரீய ரைபில்ஸ் பாதுகாப்பு படையை சேர்ந்த 40 வீரர்கள் உட்பட சுமார் 60 பேர் தவித்துள்ளனர்.
வெள்ளை போர்வை போர்த்தி காணப்படும் காஷ்மீர்
#WATCH | Jammu & Kashmir | Snow-blanketed trees and houses in Anantnag during a fresh spell of snowfall in the area pic.twitter.com/oGRDv9hoWW
— ANI (@ANI) January 27, 2026
இதையும் படிங்க : கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்த கணவர்.. இளம் பெண் தற்கொலை!
2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட 60 பேர்
வீரர்கள் உள்ளிட்ட 60 பேர் சிக்கித் தவித்த நிலையில், அது குறித்து தகவல் அறிந்து எல்லையோர சாலை அமைப்பான பிஆர்ஓ குழுவினர் ஜனவரி 24, 2026 முதல் தொடர்ந்து இராண்டு நாட்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மீட்பு பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றதாகவும், சாலைகளில் தேங்கி கிடந்த பனி முழுவதும் அகற்றப்பட்டு சிக்கியிருந்தவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.