பதட்டத்தில் இருக்கும்போது அதிகரிக்கும் இதயத் துடிப்பு – நோயின் அறிகுறியா?

Overthinking Affects Heartbeat Health : திடீரென ஆழந்த சிந்தனையில் இருக்கும்போது, ஆதீத பயம் அல்லது பதட்டம் ஏற்படும்போது நமது இதயம் வேகமாக துடிப்பதை நம்மில் பலரும் உணர்ந்திருப்போம். இது ஏதோ ஒரு நோயின் அறிகுறியாக இருக்குமோ என்ற குழப்பம் இருக்கும்.

பதட்டத்தில் இருக்கும்போது அதிகரிக்கும் இதயத் துடிப்பு - நோயின் அறிகுறியா?

மாதிரி புகைப்படம்

Published: 

20 Jun 2025 09:58 AM

சில நேரங்களில் நாம் ஆழ்ந்த எண்ணங்களில் மூழ்கியிருக்கும்போது அல்லது சில கவலைகள் அல்லது பயத்தால் சூழப்பட்டிருக்கும்போது, ​​நமது இதயத் துடிப்பு திடீரென்று அதிகரிக்கிறது. இந்த நிலை பலருக்கு ஏற்படுகிறது, மேலும் இது இதயப் பிரச்சினையா? இல்லையா? என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். சாதாரண சூழ்நிலைகளில்,  ஒருவருக்கு  இதயத் துடிப்பு நிமிடத்திற்கு 60 முதல் 100 முறை துடிக்கும் (BPM), ஆனால் சமயங்களில் எந்த வேலையும் செய்யாத போது இதயத் துடிப்பு 100 BPM ஐ விட அதிகமாக இருந்தால் அது ‘டாக்கிகார்டியா’ என்று அழைக்கப்படுகிறது. சிந்திக்கும்போது இதயத் துடிப்பு அதிகரிப்பது மன மற்றும் உடல் ரீதியான எதிர்வினையாக இருக்கலாம். இது ஏன் நிகழ்கிறது, அது ஏதேனும் நோயின் அறிகுறியா என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நாம் கவலை, பயம், பதற்றம் அல்லது குழப்பமான எண்ணங்களில் மூழ்கியிருக்கும்போது, உடலின் மன அழுத்த ஹார்மோன்களான கார்டிசோல் மற்றும் அட்ரினலின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது, இதன் காரணமாக இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. இது உடலின் இயற்கையான செயல்முறை. இது ஆபத்தை சமாளிக்க உங்களை தயார்படுத்துகிறது. இந்த ஆபத்து உண்மையில் இல்லாவிட்டாலும், மனதில் ஓடும் கற்பனைகள் உடலையும் அப்படியே உணர வைக்கின்றன. சிந்திக்கும்போது விரைவான நாடித்துடிப்பு மன அழுத்தத்தின் அறிகுறியாகவும் இருக்கலாம், இது சில நேரங்களில் உடலையும் பாதிக்கிறது.

அதிகரிக்கும் இதயத் துடிப்பு: நோயின் அறிகுறியா?

ராஜீவ் காந்தி மருத்துவமனையின் இருதயவியல் துறையின் டாக்டர் அஜித் ஜெயின் கூறுகையில், சிந்திக்கும் போது இதயத் துடிப்பு அதிகரிப்பது எந்தவொரு கடுமையான நோயின் அறிகுறிகள் என எண்ணத் தேவையில்லை. ஆனால் அது உளவியல் அல்லது இதயக் கோளாறின் அறிகுறியாக இருக்கலாம். இந்த நிலை அடிக்கடி ஏற்பட்டால், குறிப்பாக ஓய்வில் இருக்கும்போது கூட, அதீத பயம்,  அல்லது பதட்டம் குறிப்பாக டாக்ரிக்கார்டியா போன்ற நிலைமைகளின் ஒரு பகுதியாக இருக்கலாம். சில நேரங்களில் இது தைராய்டு அல்லது காஃபின் அதிகமாக உட்கொள்வதன் விளைவாகவும் இருக்கலாம். இதனுடன் தலைச்சுற்றல், பதட்டம், மார்பு வலி, வியர்வை அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளும் இருந்தால், உடனடியாக ஒரு மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். நீண்ட காலமாக இதைப் புறக்கணிப்பது இதயத்தைப் பாதித்து, எதிர்காலத்தில் கடுமையான இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்திற்கு வழிவகுக்கும்.

மன அழுத்தத்தில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது?

  • தினமும் தியானம் செய்யுங்கள்.
  • போதுமான தூக்கம் அவசியம். அதே நேரம் சரியான நேரத்தில் தூங்குங்கள்.
  • காஃபின் மற்றும் நிகோடின் அளவைக் குறைக்கவும்.
  • உங்கள் அன்றாட வாழ்க்கையில் உடற்பயிற்சியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • உங்கள் எண்ணங்களை நேர்மறையாக வைத்திருங்கள்.
  • அதிகப்படியான சிந்தனையைத் தவிர்க்கவும்.
  • தேவைப்பட்டால், ஒரு மனநல மருத்துவர் அல்லது ஆலோசகரை அணுகவும்.