பிரபல தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்!
AVM Saravanan: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களை ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்துள்ளது. அதில், சம்சாரம் அது மின்சாரம், சிவாஜி என பல வெற்றி படங்களை ஏ.வி.எம்.சரவணன் தயாரித்துள்ளார். பல ஸ்டார் நடிகர்களை உருவாக்கியுள்ளார்.

ஏ.வி.எம்.சரவணன்
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், ஏ.வி.எம் நிறுவனத்தின் இயக்குநருமான ஏ.வி.எம்.சரவணன் (86) காலமானார். சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை வயது மூப்பு காரணமாக காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர், தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர் ஆவார். ஏ.வி.மெய்யப்ப செட்டியாருக்கு பின்னர் அந்த நிறுவனத்தை அவரது மகன் ஏ.வி.எம்.சரவணன் நிர்வகித்து வந்தார். சிவாஜியின் பராசக்தி முதல் விஜய்யின் வேட்டைக்காரன் வரை பல தமிழ் படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்துள்ளது. அதில், சம்சாரம் அது மின்சாரம், சகலகலா வல்லவன், மனிதன், எஜமான், சிவாஜி, வேட்டைக்காரன், மின்சார கனவு உள்ளிட்ட பல வெற்றி படங்களை ஏ.வி.எம். சரவணன் தயாரித்துள்ளார்.
Also Read… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளில் ரீ ரிலீஸாகும் எஜமான் படம் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
ஏவிஎம் ஸ்டுடியோஸ் வளர்ச்சியில் முக்கியப் பங்கு:
1958ஆம் ஆண்டில் இருந்து ஏவிஎம் நிறுவனத்தின் சினிமா தயாரிப்பில் சரவணன் ஈடுபட்டு வந்தார். இவர் ஏவிஎம் மெய்யப்ப செட்டியாரின் மூன்றாவது மகன் ஆவார். ஏவிஎம் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு ஆற்றியவர் என்றே கூறலாம், அந்த அளவுக்கு அந்நிறுவனத்தை, சரணவன் திறம்பட நிர்வகித்து வந்தார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பல தலைமுறை நடிகர்களின் படங்களைத் தயாரித்துள்ளார். தற்போது அவரைத் தொடர்ந்து அவரது மகன் குகன் ஏவிஎம் நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
வயது மூப்பால் உடல்நலக் குறைவு:
வயது மூப்பினால் ஏற்படும் உடல்நல பிரச்சினை காரணமாக சரவணன் கடந்த சில மாதங்களாக நடக்க முடியாமல் இருந்து வந்துள்ளார். அதோடு, சிறிது காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், வடபழனியல் ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், இன்று காலை 5.30 மணியளவில் அவர் காலமானார். அவரது உடல் ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள 3வது தளத்தில் அஞ்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்று பிற்பகல் 3 மணியளவில் ஏவிஎம் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Also Read… காந்தாரா படம் தொடர்பான சர்ச்சை… மன்னிப்பு கோரிய நடிகர் ரன்வீர் சிங்
திரைத்துறையினர் இரங்கல்:
ஏவிஎம் சரவணனின் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவை அறிந்த திரைப்பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ரஜினி, கமல் உள்ளிட்ட பல ஸ்டார்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சரவணன் என்பதை நினைவுகூர்ந்து, திரையுலகினர் பலரும் அவருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.