மேற்குவங்க தேர்தல்.. வாக்கு இயந்திரங்களில் முறைகேடு? பாஜக – திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடும் மோதல்
பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகளைத் திரிணாமுல் காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரிஜு தத்தா கூறுகையில், "வங்காளத்தில் பாஜக படுதோல்வி அடையப்போவதால், தோல்வி பயத்தில் பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி அழுகிறார்கள். வாக்கு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவை. அதில் ஏதேனும் தவறு நடந்தால் அதற்குத் தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு என்றார்.

வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக புகார்
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜியின் கோட்டையான டைமண்ட் ஹார்பர் பகுதியில் வாக்கு இயந்திரங்கள் திருத்தப்பட்டதாகப் பரபரப்பு புகார் எழுந்துள்ளது. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஃபால்டா பகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிகளில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) பாஜகவின் ‘தாமரை’ சின்னத்திற்கு நேரே உள்ள பட்டன் மீது டேப் ஒட்டப்பட்டுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதையும் படிக்க: தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா? பெட்ரோலியத்துறை அமைச்சகம் விளக்கம்
டைமண்ட் ஹார்பர் மாடல்:
This is what Mamata Banerjee was defending when she spoke up for Jehangir Khan, a criminal contesting on a TMC ticket from Falta in Diamond Harbour.
In several polling booths, the option to vote for the BJP has been blocked using a tape, effectively preventing voters from… pic.twitter.com/sKw3mcdA86
— Amit Malviya (@amitmalviya) April 29, 2026
இது குறித்து பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா கூறுகையில், “பல வாக்குச்சாவடிகளில் பாஜகவுக்கு வாக்களிக்கும் வசதி டேப் மூலம் தடுக்கப்பட்டுள்ளது. இதுதான் ‘டைமண்ட் ஹார்பர் மாடல்’. இதே முறையைப் பயன்படுத்திதான் அபிஷேக் பானர்ஜி தனது மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றார்” என்று சாடினார். ஹரிந்தங்கா உயர்நிலைப் பள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில், மூன்றாவது பட்டன் மீது டேப் ஒட்டப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டும் வீடியோ ஒன்றையும் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி:
பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுகளைத் திரிணாமுல் காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரிஜு தத்தா கூறுகையில், “வங்காளத்தில் பாஜக படுதோல்வி அடையப்போவதால், தோல்வி பயத்தில் பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி அழுகிறார்கள். வாக்கு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவை. அதில் ஏதேனும் தவறு நடந்தால் அதற்குத் தேர்தல் ஆணையம்தான் பொறுப்பு. அமித் மாளவியா ட்வீட் போடுவதை நிறுத்திவிட்டு, தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்கட்டும்,” என்று பதிலடி கொடுத்தார்.
மேலும், தேர்தல் ஆணையத்தையும், ஐபிஎஸ் அதிகாரி அஜய் பால் சர்மாவையும் (சிங்கம் என அழைக்கப்படுபவர்) திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. அஜய் பால் சர்மா தங்கள் வேட்பாளர் ஜஹாங்கீர் கானை மிரட்டுவதாகத் திரிணாமுல் ஏற்கனவே புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டு:
இதற்கிடையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறுகையில், மத்தியப் பாதுகாப்புப் படையினர் பாஜகவின் விருப்பத்திற்கு ஏற்பச் செயல்படுவதாகவும், வெளிமாநிலங்களில் இருந்து பார்வையாளர்களை வரவழைத்து வாக்காளர்களைப் பாரதிய ஜனதா கட்சி அச்சுறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க: “பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு இனி எதிர்காலம் இல்லை!”.. பசுமைப் புரட்சியை நோக்கி நிதின் கட்கரி அதிரடி!!
தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு:
இது போன்ற புகார்கள் குறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், புகார்கள் முறையாக ஆய்வு செய்யப்படும் என்றும், முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளன. வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறுகள் மற்றும் ஒருசில இடங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களால் மேற்கு வங்க இரண்டாம் கட்டத் தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.