த.வெ.க தனித்து போட்டியிட்டால் மட்டுமே எதிர்காலம் – விசிக தலைவர் திருமாவளவன்..
2026 Assembly Election: வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் ஆனால் அது எதிர்க்கட்சியாகவோ அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவிற்கோ இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் (2026 Assembly Election) தமிழக வெற்றிக் கழகம் (Tamizhaga Vetri Kazhagam) தனித்து போட்டியிட்டால் மட்டுமே அக்கட்சி தலைவர் விஜய்க்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் அதற்கான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக கட்சி வளர்ச்சிப் பணிகள், மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அடுத்த ஆண்டு தேர்தலை சந்திப்பது எப்படி என்பது குறித்து தொடர்ச்சியாக அனைத்து கட்சிகள் தரப்பிலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆளும் திராவிட முன்னேற்ற கழக அரசை எப்படியாவது இம்முறை அதாவது 2026 சட்டமன்ற தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகள் தரப்பில் மும்மரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக வெற்றி கழகம் தனித்து போட்டியிட வேண்டும்:
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனியார் செய்தி தொலைக்காட்சியான நியூஸ் 18க்கு அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் எனவும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சர் ஆவது கனவாக தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தால் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பான கேள்விக்கு அரசியல் களத்தில் பலரும் வருகை தந்துள்ளார்கள் சென்றுள்ளார்கள். அதே போல் தான் இந்த தமிழக வெற்றிக்கழகமும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். ஆனால் இந்த கடும் சவால்களை எல்லாம் கடந்துதான் தற்போது திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணி கட்சிகளும் இருப்பதாக கூறியுள்ளார்.
எல்லொரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது:
தொடர்ந்து பேசிய அவர், ” அனைவரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. சினிமா துறை என்பது வேறு அரசியல் என்பது வேறு. ரசிகர்கள் அரசியல் களப்பணியாளர்களாக இருக்க முடியாது. எம்ஜிஆர், காமராஜர் கலைஞர் உள்ளிட்டோருடன் பயணம் செய்தவர். பேரறிஞர் அண்ணாவால் அரவணைக்கப்பட்டவர். கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு அரசியல் கட்டங்களை கடந்து வந்தவர்.
அவர் தனியாக சென்ற பொழுது மிகவும் அனுபவம் வாய்ந்த அரசியல் நிர்வாகிகள் அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்தை எடுத்துக்கொண்டோம் என்றால் ரசிகர்கள் இருந்தனர், ஆனால் கள பணியாளர்கள் இல்லை. அதே போல் தான் கமல்ஹாசன் அவர்களுக்கும் ரசிகர்கள் இருந்தாலும் களப்பணியாளர்கள் இல்லை. அரசியல் நடத்த வேண்டும் என்றால் களப்பணியாளர்கள் தேவை.
சட்டமன்ற தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் விஜய்:
தமிழக வெற்றிகழகத்தின் தலைவர் விஜயுடன் ரசிகர்கள் இருக்கிறார்களே தவிர களப்பணியாளர்கள் இல்லை” என தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றும் ஆனால் அது எதிர்க்கட்சியாகவோ அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கும் அளவிற்கோ இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.